நாகர்கோவில், 20.08.2026
கன்னியாகுமரி மாவட்டத்தில் சாலை விபத்துகள் மற்றும் உயிரிழப்புகளை குறைக்கும் நோக்கில், இருசக்கர வாகன ஓட்டுநர்கள் மட்டுமின்றி, பின்னால் அமர்ந்து பயணிப்பவர்களும் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் என மாவட்ட காவல்துறை தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.
அந்த வகையில் நேற்று நாகர்கோவில் செட்டிகுளம் பகுதியில் நடைபெற்ற சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்வில், விதிமுறைகளை மதித்து தலைக்கவசம் அணிந்து பயணித்த பொதுமக்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் ஸ்டாலின் நேரில் பாராட்டினார்.
மேலும், தலைக்கவசம் உயிரைக் காக்கும் கவசம் என்பதை வலியுறுத்தும் விதமாகவும், சட்டத்தை மதித்து செயல்படும் பொறுப்புணர்வை ஊக்குவிக்கும் வகையிலும், உலகப் பொதுமறையான திருக்குறள் நூல் மற்றும் இனிப்புகளை வழங்கி கௌரவித்தார்.
மேலும் இருசக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணியாமல் பயணித்த சிறுவர் சிறுமியர்களுக்கு மாவட்ட எஸ்பி ஸ்டாலின் இலவச ஹெல்மெட் கற் அணிவித்தார். “விபத்து நடந்த பிறகு வருந்துவதை விட, தலைக்கவசம் அணிந்து முன்கூட்டியே பாதுகாப்பாக இருப்பதே சிறந்தது. ஓட்டுநர் மட்டுமல்ல, பின்னால் பயணிப்பவரின் உயிரும் சம அளவில் முக்கியமானது” என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் டிஎஸ்பி இளஞ்செழியன், போக்குவரத்து இன்ஸ்பெக்டர் அருண் உட்பட பலர் பங்கேற்றனர்.



