நாகர்கோவில், செப்டம்பர் 30 –
நாகர்கோவிலில் குமரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் காரணமாக மனுக்களுடன் வந்த மக்களிடம் போலீசார் தீவிர சோதனை நடத்தினர்.
நாகர்கோவிலில் குமரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தி திங்கட்கிழமை தோறும் நடைபெறுகின்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று காலை தொடங்கி நடந்தது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் வருகை தந்தனர். இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கக் கேட்டும் மனுக்கள் அளித்தனர். காலையில் சாரல் மழை பெய்து கொண்டிருந்த நிலையில் அதனை பொருட்படுத்தாமல் மக்கள் கலெக்டர் அலுவலகம் வந்திருந்தனர்.
கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் கணினிகளில் மனுக்கள் ஆன்லைனில் பதிவு செய்யும் பணிகள் நடந்தது. இங்கு நீண்ட வரிசையில் நின்று மக்கள் மனுக்களை பதிவு செய்தனர். மாவட்டம் முழுவதும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தின் கீழ் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு மனுக்கள் பெறப்படுவதால், கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறுகின்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் வருகின்ற மக்கள் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது.
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் வருகின்றவர்கள் தங்களது கோரிக்கைகள் நிறைவேறவில்லை என்று கூறி அவ்வப்போது கலெக்டர் அலுவலகத்தில் பெட்ரோல் ஊற்றி திடீர் தற்கொலை முயற்சியில் ஈடுபடுகின்ற நிகழ்வுகளும் நடைபெற்று வருகிறது. இதனை தடுக்கும் வகையில் கலெக்டர் அலுவலகத்தில் போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. பொதுமக்கள் கொண்டு வந்த உடமைகள், தண்ணீர் பாட்டில் போன்றவற்றை போலீசார் கலெக்டர் அலுவலக வாசல் பகுதியில் தீவிரமாக பரிசோதனை செய்தனர்.


