கிருஷ்ணகிரி, ஆகஸ்ட் 5 –
கிருஷ்ணகிரி அருகே உள்ள அவதானபட்டியில் அமைந்துள்ள மிகவும் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவிலின் ஆடித்திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இவ்விழாவில் முக்கிய நிகழ்வாக இன்று அவதானபட்டி, நெக்குந்தி மற்றும் அதனை சுற்றியுள்ள சிறு, சிறு கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பெண்கள் கலந்து கொண்ட மாபெரும் மாவிளக்கு ஊர்வலம் நடைபெற்றது.
இதில் மேளத்தாளங்கள் முழங்கிட, தர்மபுரி-கிருஷ்ணகிரி தேசிய நெஞ்சாலை வழியாக கிராமத்தெய்வங்களை ஊர்வலமாக எடுத்து வந்த பத்தர்கள் அலகு குத்தியும், தீச்சட்டி ஏந்தியும், அம்மன் வேடமணிந்தும், கரகம் எடுத்து வந்து அம்மனை வழிபட்டனர். இதில் பக்தர்கள் வேண்டுதலை நிறைவேற்றும் வகையில் ஆடுகள், கோழிகளை அம்மனுக்கு பலியிட்டு நேர்த்திக் கடன் செலுத்தினர்.
இந்த விழாவில் கிருஷ்ணகிரி, அவதானப்பட்டி, நெக்குந்தி, காவேரிப்பட்டிணம், திம்மாபுரம், பெரியமுத்தூர், சின்னமுத்தூர், உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துக்கொண்டு மாரியம்மனை வழிப்பட்டனர். இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் திருப்பதி கவுண்டர் மற்றும் பரம்பரை அறங்காவலர் உறுப்பினர்கள் மாரியப்பன் கவுண்டர், திருப்பதி கவுண்டர், மகேந்திர கவுண்டர், மாரியப்பன் கவுண்டர், சீனிவாச கவுண்டர், கிருஷ்ணமூர்த்தி கவுண்டர் உள்ளிட்ட அவதானப்பட்டி கிராம மக்கள் சிறப்பாக செய்து இருந்தனர்.



