திருப்பூர், ஆக. 27 –
கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தால் கூடுதல் லாபம் எனக்கூறி ரூ.46.84 லட்சம் மோசடி செய்த நபர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பாதிக்கப்பட்டவர்கள் கமிஷனர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
திருப்பூர், பாலமுருகன் நகர் முதல் வீதியை சேர்ந்த கமலம் என்பவர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: திருப்பூர் பொம்மநாயக்கன் பாளையத்தை சேர்ந்த செந்தில் குமார் என்பவர் கிரிப்டோ கரன்சியில் நல்ல வருமானம் வருவதாக ஆசை வார்த்தை கூறி எங்கள் 13 பேரிடம் ரூ.46.84 லட்சம் பணமாக பெற்றார். பணம் பெற்று ஒரு வருடம் எந்தவித லாப பணமும் கொடுக்கவில்லை.
நாளுக்கு நாள் கிரிப்டோ கரன்சி விலை ஏறும் எனக் கூறினார். ஆனால், அந்த பணமும் அவர் தரவில்லை. நாங்கள் வீட்டு பத்திரங்களை அடமானம் வைத்து பணத்தை கொடுத்தோம். லாபம் இல்லாவிட்டாலும் நாங்கள் கொடுத்த பணத்தை பெற்று கொடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறி உள்ளார்.



