நாகர்கோவில், மே 1 –
குமரி மாவட்டம் பத்துகாணி அருகே காளிமலை கோவிலில் இந்த ஆண்டு சித்ரா பௌர்ணமி பொங்கல் வழிபாடு மற்றும் புனித யாத்திரை விழா ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி மிகச் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
ஏப்ரல் 19-ம் தேதி காலை முதல் பக்தர்கள் காளிமலைக்கு புனித யாத்திரையைத் தொடங்கினர். கடல் மட்டத்திலிருந்து சுமார் 3500 அடி உயரத்தில் அமைந்துள்ள இந்தத் தலம் தென்னிந்தியாவின் முக்கிய சக்தி பீடங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
மார்த்தாண்ட வர்மா மஹா ராஜா போரின் போது இந்த மலை மீது மறைந்திருந்த நேரத்தில் எதிரிகளிடம் இருந்து தர்ம சாஸ்தா, காளி அம்மன் தோன்றி காப்பாற்றியதால் மன்னர் இந்த பகுதியை பழங்குடி மக்களுக்கு இந்த மலை பகுதியை பட்டா வழங்கியதாக வரலாறு ஆதாரங்கள் தெரிவிக்கின்றன. அகஸ்தியர் முனி தவம் செய்த பகுதியாக கூறப்படும் காளிமலை சித்ரா பௌர்ணம் பொங்கல் வழிபாடு மிக முக்கியமாக உள்ளது.
விழாவை முன்னிட்டு அகஸ்திய முனிவர் உட்பட 18 சித்தர்களுக்கு சங்கல்ப பூஜை, தேவி பாகவத பாராயணம் மற்றும் அன்னதானம் போன்றவை நடைபெற்றன. பழங்குடியின மக்கள் நடத்தும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு இன்று மலை உச்சியில் தமிழக கேரளாவை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பெண்கள் மற்றும் பக்தர்கள் மலையேறி சென்று பொங்கலிட்டு அம்மனை வழிபட்டனர்.
தமிழ்நாடு மற்றும் கேரளாவிலிருந்து வரும் ஆயிரக்கணக்கான பக்தர்களின் வசதிக்காகக் குடிநீர், போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளைக் கோவில் நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டுள்ளன.



