மார்த்தாண்டம், மார்ச் 23 –
அகஸ்தீஸ்வரம் அருகே உள்ள மணிகட்டிபொட்டல் பகுதியை சேர்ந்தவர் பாஸ்கரன். அண்ணாமலை பல்கலைக்கழக உறுப்பு கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவருக்கும் களியக்காவிளை பகுதியை சேர்ந்த ஜெயசேகர் (61) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து ஜெயசேகர் தனது பைனான்ஸில் பணம் முதலீடு செய்தால் அதிக வட்டி தருவதாக கூறியுள்ளார். இதனை நம்பிய பாஸ்கரன் கடந்த 2023 ஆம் ஆண்டு ரூ. 25 லட்சத்து 9 ஆயிரத்து 963 முதலீடு செய்துள்ளார். இதை அடுத்து பிள்ளையார்புரம் பகுதியில் உள்ள தனியார் வங்கியில் முதலீடுக்கான வட்டியை செலுத்தி வந்ததாக கூறியுள்ளார்.
பின்னர் கடந்த ஆண்டு பாஸ்கரன் முதலீட்டுக்கான வட்டியுடன் கூடிய பணத்தை கேட்ட போது ஜெயசேகர் பணத்தை கொடுக்க மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் தான் ஏமாற்றப்பட்டது உணர்ந்த பாஸ்கரன் களியக்காவிளை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் பண மோசடி செய்ததாக ஜெயசேகர் அவரது மனைவி கலா (55) ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


