களியக்காவிளை, மார்ச் 16 –
களியக்காவிளை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அடிக்கடி ஏற்படும் அறிவிக்கப்படாத மின் தடையால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழ்நாடு அரசு மின்சார வாரியத்தின் துணை மின் நிலையம் குமரி மாவட்டம் மருதங்கோடு பகுதியில் செயல்பட்டு வருகிறது. இந்த துணை மின்சார நிலையத்தில் இருந்து களியக்காவிளை, மீனச்சல் படந்தாலுமுடு மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள வீடுகள், சிறு குறு வர்த்தக நிறுவனங்கள் உள்ளிட்டவைகளுக்கு மின் இணைப்பு கொடுத்துள்ளனர். இவ்வாறு கொடுக்கப்பட்டுள்ள மின் இணப்புகளில் இருந்து அடிக்கடி அறிவிக்கப்படாத மின் தடை ஏற்படுகிறது. இதனால் வர்த்தகர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் பாதிகபட்டுள்ளனர்.
மேலும் மிகவும் பழுதுபட்டுள்ள மின் கம்பிகள் தாழ்வாக உள்ளது. இதனை மாற்றி அமைத்து புதிய மின்கம்பிகள் அமைப்பது காலத்தின் கட்டாயம் ஆகும். மின்சார வாரிய அரசு அதிகாரிகளின் அலட்சிய போக்கால் பொதுமக்கள் பாதிப்படைந்து வருகின்றனர். இதனை தவிர்க்கவும், அடிக்கடி ஏற்படும் மின்தடை ஏற்படாமல் இருக்க சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.


