கன்னியாகுமரி, ஜூன் 4 –
பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கிறார்கள். கன்னியாகுமரி சுற்றுலா வரும் பயணிகள் காலையில் சூரியன் உதயமாகும் காட்சியை கண்டு ரசித்த பின்னர், முக்கடல் சங்கமத்தில் நீராடி பகவதி அம்மனை தரிசனம் செய்துவிட்டு, அடுத்தபடியாக கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு பாறை மற்றும் 133 அடி உயர திருவள்ளுவர் சிலை கடலின் நடுவே அமைக்கப்பட்டுள்ள கண்ணாடி இழை கூண்டு பாலம் வழியாக நடந்து சென்று பார்வையிடுவார்கள். இதற்காக பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம் சார்பில் படகுகள் இயக்கப்பட்டு வருகிறது. படகு போக்குவரத்து சாதாரண நாட்களில் தினமும் காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 4 மணி வரை தொடர்ச்சியாக நடைபெறும். சீசன் நேரங்களில் காலை 7 மணிக்கு படகு சேவை தொடங்கி நடைபெறும்.
தற்போது கோடை சீசன் இன்றுடன் நிறைவு பெறுகிறது. இந்த கோடை விடுமுறை கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கியது. கோடை விடுமுறை சீசனை முன்னிட்டு கடந்த ஏப்ரல் மாதம் 2 லட்சத்து 25 ஆயிரத்து 55 பயணிகளும்,மே மாதம் 3 லட்சத்து 60 ஆயிரத்து 964 சுற்றுலா பயணிகள் என 2 மாதங்களில் 5 லட்சத்து 86 ஆயிரத்து 19 சுற்றுலா பயணிகள் படகில் பயணம் செய்து விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையை கண்டு ரசித்துள்ளனர். இதனை பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.



