கன்னியாகுமரி, அக். 9 –
கன்னியாகுமரி கடற்கரை சாலையில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்துக்கு சொந்தமான காட்சி கோபுரம் அமைந்துள்ளது. கடற்கரையையொட்டி அமைந்துள்ள இந்த காட்சி கோபுரம் அருகே உள்ள இடத்தை தனியாருக்கு குத்தகைக்கு விடப்பட்டது. குத்தகைதாரர்கள் பொழுது போக்கு மற்றும் சிறு குழந்தைகள் விளையாடுவதற்கான விளையாட்டு உபகரணங்கள் நிறுவுவதற்கா கொட்டகை அமைக்கப்பட்டு வந்தது. இந்த கொட்டகை உயரமானதாக அமைக்கப்படவுள்ளதால் கடலின் இயற்கை அழகை மறைக்கும் விதமாகவும், சூரியன் மறையும் காட்சியை பார்க்க முடியாமலும் அமைக்கப்பட்டது.
இது குறித்து நகராட்சி நிர்வாகத்துக்கு புகார்கள் வந்தன. அதன் அடிப்படையில் கன்னியாகுமரி நகராட்சி ஆணையர் கண்மணி உத்தரவின்பேரில் நகராட்சி நகர் அமைப்பு ஆய்வாளர் ஷேக் அப்துல்காதர், நகராட்சி சுகாதார ஆய்வாளர் அந்தோணி, நகராட்சி சுகாதார மேற்பார்வையாளர்கள் பிரதீஷ், சிவராமலிங்கம், மது மற்றும் பணியாளர்கள் அங்கு சென்று கடலின் இயற்கை அழகையுைம், சூரியன் மறைவு காட்சியையும் மறைக்கும் வகையில் கொட்டகை அமைக்கப்பட்டு வந்ததை தடுத்து நிறுத்தினர். இதைத்தொடர்ந்து கொட்டகை அமைக்கும் பணி பாதியில் நிறுத்தப்பட்டது.
இதனால் இந்த கொட்டகை அமைப்பதற்காக நடப்பட்ட இரும்பு தூண்கள் மற்றும் ஆஸ்பெஷ்டாஸ் சீட்டுகள் அகற்றப்பட்டன. இதைத்தொடர்ந்து தற்போது கடற்கரை சாலையில் சுற்றுலா பயணிகள் நடந்தவாறு பார்த்து ரசிக்க முடிகிறது. அதேபோல மாலை நேரங்களில் சூரியன் மறையும் காட்சியையும் சுற்றுலா பயணிகள் கடற்கரை சாலையில் இருந்து எந்தவித மறைவும் இல்லாமல் பார்த்து ரசிக்க முடிகிறது.



