கன்னியாகுமரி, நவ. 7 –
இந்தியாவில் கடந்த 1966-ஆம் ஆண்டு நவம்பர் 7-ஆம் தேதி பசுவதை தடை சட்டத்தை எதிர்த்ததன் காரணமாக மதவெறி அமைப்பு நடத்திய வன்முறையில் அப்போது காமராஜரின் வீடு தீக்கிரையாக்கப்பட்டது. வரலாற்றில் கருப்பு தின மாக அமைந்த நாளை நினைவு கூறும் வகையில் காமராஜர் தேசிய பேரவை சார்பில் கன்னியாகுமரியில் உள்ள காமராஜர் மணிமண்டபத்தில் மதவெறி கும்பலை தமிழகத்தில் அனுமதிக்க மாட்டோம் என்ற உறுதி மொழி எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கருப்பு சட்டை அணிந்து பங்கேற்றார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில்: மதத்தின் பெயரால் மக்களை பிரிக்கும் இயக்கம் இன்று உண்மைக்கு புறம்பாக வெறுப்பை பிரச்சாரம் செய்து வருகிறது. நாட்டை மாதம்,ஜாதி என பிரித்து அழிவு பாதைக்கு பாஜக கொண்டு செல்கிறது. இது போன்ற செயல்களில் ஈடுபடும் அமைப்புகளை பிரதமர் மோடி பெருமையாக பேசுகிறார் அவரை வன்மையாக கண்டிக்கிறோம். இவருக்கு எதிராக திராவிட இயக்கங்கள் ஒன்றுபட்டு போராடுவோம். மதவெறி கும்பல் தமிழகத்தில் ஆதிக்கம் செய்யவிடாமல் தடை செய்ய போராடுவோம்.
எஸ்.ஐ.ஆர் என்பதும் ஒரு வன்முறை தான். எந்த காமராஜரை அழித்து ஒழிக்கவேண்டும் என செயல்பட்டார்களோ அவர்கள் தற்போது வாக்கு வங்கி அரசியலுக்காக காமராஜரை கையில் எடுத்துள்ளார்கள். இது பாஜகவின் இரட்டை வேடம். காமராஜர் மீது தாக்குதல் நடத்திய நாள் கருப்பு தினம் என அறிவித்தவர் தந்தை பெரியார், அண்ணா, கலைஞர் என எங்கள் தலைவர்கள் அனைவருக்கும் காமராஜருக்குமான உறவு என்பது கொள்கை ரீதியிலான அசைக்க முடியாத ஒன்று. ஓவ்வொரு இடங்களிலும் நடைபெற்று இருக்கும் எஸ்.ஐ.ஆர் மோசடியின் விளைவாக தான் அவர்கள் ஆட்சியில் இருக்கிறார்கள் என்பதை தெளிவாக காட்டுகிறது. மோடி நேர்மையானவர் என்றால் ஆட்சியை கலைத்து விட்டு செல்லவேண்டும் என கூறினார். நிகழ்ச்சியில் திமுக மாவட்ட துணை செயலாளர் பூதலிங்கம் பிள்ளை, அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய செயலாளர் பாபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.



