நாகர்கோவில், ஜூலை 11 –
சர்வதேச அளவில் புகழ்பெற்ற சுற்றுலாத்தலமாக விளங்கும் கன்னியாகுமரி மாவட்டத்தில், சுற்றுலாப் பயணிகளை மேலும் கவரும் வகையிலும், புதிய சுற்றுலாத்தளங்களை உருவாக்குவதோடு, அந்த சுற்றுலாத்தளங்களில் உள்ள உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் கன்னியாகுமரியில் உள்ள தமிழ்நாடு ஹோட்டல் கூட்டரங்கில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சித்தலைவர் மு.பிரதாப் தலைமை வகித்தார்.
அமைச்சர் செ.ராஜேஷ் குமார் கூட்டத்தில் கூறியதாவது: கன்னியாகுமரி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத்தலங்களை சர்வதேச தரத்திற்கு உயர்த்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். குறிப்பாக கன்னியாகுமரி, லெமூர், குளச்சல் மற்றும் தேங்காய்ப்பட்டணம் உள்ளிட்ட கடற்கரைகள் மற்றும் பேச்சிப்பாறை அணை ஆகிய பகுதிகளில் சுற்றுலா தலங்களை உருவாக்குவது குறித்து புதிய கருத்துருக்கள் மற்றும் திட்ட மதிப்பீடுகள் குறித்து விரிவாகக் கலந்தாலோசிக்கப்பட்டது. மாவட்டத்தின் இயற்கை எழில் கொஞ்சும் பகுதிகள் மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களை மேம்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது.
சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிக்கும் வகையில் குளச்சல் உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் புதிய பூங்காக்கள் அமைத்தல், இரவு நேரங்களிலும் சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பாக இரசிக்கும் வகையில் நவீன மின்விளக்கு வசதிகள், கடற்கரை பகுதிகளில் இளைஞர்கள் உட்பட அனைவரையும் கவரும் வகையில் நீர் விளையாட்டு மற்றும் சாகசச் சுற்றுலாத் திட்டங்களை அறிமுகப்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
மேலும் கன்னியாகுமரி நகராட்சிக்குட்பட்ட சுற்றுலாதலங்களை ரூ.37 கோடி மதிப்பில் மேம்படுத்திட திட்ட வரைவு தயாரிக்கப்பட்டு, தமிழ்நாடு அரசின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அமைச்சர் கூறினார்.
முன்னதாக பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக வளாகத்தினை திடீர் ஆய்வு மேற்கொண்டு, அங்கு படகு சவாரி மேற்கொள்வதற்கான நுழைவு சீட்டு வழங்கும் அலுவலகத்தினை பார்வையிட்டு, சுற்றுலா பயணிகளிடம் முறையாக நுழைவு சீட்டு வழங்கிறார்களா எனவும், சுற்றுலாபயணிகளின் கோரிக்கைகளை கேட்டறிந்தார்கள். அதனைத்தொடர்ந்து கன்னியாகுமரி காமராஜர் மணிமண்டபம் அருகில் அமைந்துள்ள காட்சி கோபுரத்தினை பார்வையிட்டு, அந்த இடத்தில் சுற்றுலா தளங்களை மேம்படுத்துவது குறித்து ஆய்வு மேற்கொண்டார்கள்.
நடைபெற்ற நிகழ்வுகளில் கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் என்.தளவாய் சுந்தரம், மாவட்ட வன அலுவலர் அன்பு, மாவட்ட சுற்றுலா அலுவலர் காமராஜ், கன்னியாகுமரி துணை காவல் கண்காணிப்பாளர் பிரகாஷ் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.



