கன்னியாகுமரி, ஆக. 3 –
பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஒவ்வொரு வருடமும் ஆடி மாதம் நடைபெறும் ஆடி மாத நிறைபுத்தரிசி பூஜை மட்டும் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கவடியார் அரண்மனை சார்பில் நிச்சயிக்கப்படும் தேதியில் நடைபெறும். நெற்பயிர்கள் செழித்தோங்கி அறுவடை அதிகரித்து நாடு செழிப்படைய வேண்டும் என்பதற்காக இந்த நிறைப்புத்தரிசி பூஜை நடத்தப்படுகிறது.
இந்த ஆண்டு ஆடி மாத நிறைப்புத்தரிசி பூஜை நேற்று (திங்கட்கிழமை) அதிகாலை 5.30 மணி முதல் 6 மணி வரையிலான சுப முகூர்த்த வேளையில் நடைபெற்றது. அதிகாலையில் திருக்கோவிலுக்கு சொந்தமான வயல்களில் இருந்து நெற்கதிர்கள் அறுவடை செய்யப்பட்டு நெற்கதிர்கள் கன்னியாகுமரி மெயின் ரோட்டில் உள்ள அறுவடை சாஸ்தா கோவிலுக்கு கொண்டுவரப்பட்டு அங்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.
அதனை தொடர்ந்து நெற்கதிர்கள் மேளதாளம் முழங்க முக்கிய வீதியில் வழியாக கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு, மூலஸ்தான மண்டபத்தில் உள்ள பகவதி அம்மன் முன் நெற்கதிர்கள் படைக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. சிறப்பு பூஜை முடிந்த பிறகு நெற்கதிர்கள் அம்மனுக்கு படைக்கப்பட்டு அந்த நெற்கதிர்கள் பின்னர் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.
இந்த நெற்கதிரை பக்தர்கள் தங்களது வீடுகள் மற்றும் தொழில் நிறுவனங்களில் கட்டி தொங்க விடுவார்கள். இவ்வாறு நெற்கதிர்களை கட்டி தொங்க விடுவதன் மூலம் அந்த ஆண்டு முழுவதும் செல்வ செழிப்பு ஏற்படும் என்பது ஐதீகம். மேலும் இந்த நெற்கதிர் மணிகளை வயலில் தூவினால் அந்த போகம் சாகுபடி செழித்தோங்கும் என்பதும் பக்தர்களின் நம்பிக்கை.
நிறைபுத்தரிசி வழிபாட்டுடன் கோவிலில் விஸ்வரூப தரிசனம், நிர்மால்ய பூஜை, சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாரதனை பூஜை, உச்சிக்கால பூஜை, தீபாராதனை நடைபெற்றது.
நிறைப் புத்தரிசி பூஜையை முன்னிட்டு பகவதி அம்மனுக்கு தங்க கவசம், வைர கிரீடம், வைரக்கல் மூக்குத்தி மற்றும் திருவாபரணங்கள் அணிவிக்கப்பட்டு சந்தன காப்பு அலங்காரத்துடன் அம்மன் பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. பக்தர்களுக்கு நெற்கதிர்கள் பிரசாதமாக வழங்கப்பட்டது.



