கன்னியாகுமரி, ஆக. 3 –
கன்னியாகுமரி முக்கடல் சங்கமம் பகுதியில் 50 அடி உயரத்தில் தேசியக்கொடி அமைக்க அனுமதி கேட்டு, நகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கன்னியாகுமரி நகராட்சி அவசர கூட்டம் தலைவர் குமரி ஸ்டீபன் தலைமையில் இன்று நடைபெற்றது. நகராட்சி கமிஷனர் பட்டுசாமி, கவுன்சிலர்கள் சி.எஸ்.சுபாஷ், லிங்கேஷ்வரி, சுஜா, நித்யா, பூலோகராஜா, சிவசுடலைமணி, இக்பால், சகாயசர்ஜினாள், டெல்பின், ஆனிரோஸ், ஆட்லின், வினிற்றா, இந்திரா நியமன கவுன்சிலர் ஆரோக்கிய அம்மாள் நகரமைப்பு ஆய்வாளர் ஷேக் அப்துல் காதர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில், கன்னியாகுமரி அய்யன் திருவள்ளுவர் சாலை மற்றும் சூரிய அஸ்தமன சாலையில் கடற்கரை அழகுபடுத்த வேண்டும். நகராட்சிக்குட்பட்ட பகுதியில் கூட்டுக் குடிநீர் திட்டத்தை செயல்படுத்த விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க வேண்டும். பழைய பேரூராட்சி அலுவலக வளாகத்தில் பல அடுக்கு வாகன நிறுத்துமிடம் அமைக்க வேண்டும். முக்கடல் சங்கமம் பகுதியில் 24 மணி நேரமும் பறக்கும் வகையில் தேசிய கொடிக்கம்பம் அமைக்க மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெற வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.



