கன்னியாகுமரி, ஜன. 21 –
கன்னியாகுமரி அருகே கொட்டாரம் மேலத்தெருவை சேர்ந்தவர் மார்பன் (41). கொட்டாரம் கிராம வருவாய் உதவியாளராக இருந்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த கொட்டாரம் பேரூராட்சி அதிமுக கவுன்சிலரான செல்வன் என்பவருக்கும் மழைநீர் வடிகால் சம்பந்தமாக தகராறு ஏற்பட்டு முன் விரோதம் இருந்து வந்ததாக தெரிகிறது.
சம்பவதினம் மார்பன் அந்தப் பகுதியில் உள்ள டீக்கடை முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த செல்வன், அவரது மகன் மாதேஷ் மற்றும் ஆறுமுகப் பிள்ளை, சிவா ஆகியோர் முன் விரோதத்தை மனதில் வைத்துக்கொண்டு மார்பனை தகாத வார்த்தைகளால் திட்டியதுடன் கம்பி, கற்களால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்து விட்டு அங்கிருந்து சென்றனர்.
தாக்குதலில் படுகாயம் அடைந்த மார்பன் கன்னியாகுமரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். புகாரின் பேரில் கன்னியாகுமரி காவல் நிலைய போலீசார் கிராம உதவியாளரை தாக்கிய அதிமுக கவுன்சிலர் செல்வன் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


