ஈரோடு, ஏப். 28 –
ஈரோடு மாவட்டத்தில் தற்போது கோடை காலம் தொடங்கி வனத்தில் வன உயிரினங்களுக்கான போதிய நீரின்றி வறட்சி நிலவி வருகிறது. இதை கருத்தில் கொண்டு ஈரோடு மாவட்ட வனத்துறையின் மூலமாக வனத்திற்குள் வன உயிரினங்களின் நீர் தேவையினை போக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
ஈரோடு மாவட்டத்திலுள்ள வனப்பகுதிகளில் வனஉயிரினங்களின் வறட்சி காலங்களில் நீர் தேவையை பூர்த்தி செய்யும் நோக்கில், கசிவு நீர் குட்டைகள் மற்றும் சிறிய, நடுத்தர அளவிலான தடுப்பணைகள் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும், முக்கிய வனப்பகுதிகளில் குடிநீர் தொட்டிகள் நிறுவப்பட்டு, அவற்றில் சூரிய ஒளியில் இயங்கும் மின்மோட்டார் வசதி மூலம் நீர் நிரப்பப்படுவதுடன், கடுமையான வறட்சி நிலவுகின்ற பகுதிகளில் வாகனங்கள் மூலம் நீர் கொண்டு சென்று நிரப்பும் பணியும் மேற்கொள்ளப்படுகிறது. இதனுடன், இயற்கை நீர்நிலைகள் ஆழப்படுத்தப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன.
வன உயிரினங்களின் உணவுத் தேவையை மேம்படுத்தும் வகையில் அந்நிய களைச்செடிகள் அகற்றும் பணிகளும் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக வன உயிரினங்கள் உணவு மற்றும் குடிநீர் தேவைக்காக வனத்தை விட்டு வெளியேறும் சூழல்கள் பெருமளவு குறைக்கப்படுகிறது. மேலும் சரகம் வாரியாக சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு ரோந்து பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
அதிநவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி இரவில் வன உயிரினங்களின் நடமாட்டங்கள் கண்காணிக்கப்பட்டு அவை வனத்தைவிட்டு வெளியேறாமல் இருக்கு உரிய பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பல்லுயிர் பாதுகாப்பை உறுதி செய்யும் அதே வேளையில், மனிதர்களும் வனஉயிரினங்களுக்கும் இடையிலான முரண்களை குறைக்கவும் இந்த முயற்சிகள் உள்ளன என ஈரோடு வன அலுவலர் அப்பால நாயுடு தெரிவித்துள்ளார்.



