தஞ்சாவூர், ஜூன் 22 –
தஞ்சை அரசு மருத்துவமனையில் “எனக்கு யாரும் சொந்தமில்லை” என்று கடிதம் எழுதி வைத்துவிட்டு, தஞ்சை அரசு மருத்துவமனையில் மறைந்த முதியவர் ஒருவரின் உடலை, வேகமாக செயல்பட்டு சமூக வலைத்தளங்களின் உதவியோடு, தேடிப்பிடித்து அவரது உறவினர்களிடம் ஒப்படைத்த நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம், போடிநாயக்கனூர், தெற்கு ராஜ வீதியைச் சேர்ந்த கனகராஜ் என்பவரின் மகன் மகாலிங்கம் (60). இவர் (18.06.2026) தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இறப்பதற்கு முன், தனக்கு யாரும் சொந்தமில்லை என்று அவர் எழுதி வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அவரது உடல் உறவினர்கள் யாரென்றும் தெரியாமல் மருத்துவமனையிலேயே வைக்கப்பட்டு இருந்தது.
இந்தச் சோகமான தகவல், புதுக்கோட்டையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் வீரமணி மூலமாக சேலம் ஆர்.ஜே. குட்டி பிரகாஷ் கவனத்திற்கு வந்தது. தகவலின் தீவிரத்தை உணர்ந்த ஆர்.ஜே. குட்டி பிரகாஷ், உடனடியாக இதனை மை ஜீவன் எயிட் டிரஸ்ட் நிறுவனத் தலைவர் டாக்டர் ஷிபு விடம் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக உதவும் நோக்கில், டாக்டர் ஷிபு வழிகாட்டுதலின்படி, ‘மை ஜீவன் எயிட் டிரஸ்ட்’ சார்பில் இந்தத் தகவல் அனைத்து சமூக வலைத்தளங்களிலும் மிகத் தீவிரமாகப் பகிரப்பட்டது.
சமூக வலைத்தளப் பதிவினால் சில மணி நேரங்களிலேயே தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் உள்ள அவரது முகவரி கண்டறியப்பட்டு, முதியவர் மகாலிங்கத்தின் உறவினர்களுக்குத் தகவல் முறைப்படி கொண்டு சேர்க்கப்பட்டது.
தகவல் அறிந்த உறவினர்கள் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு விரைந்து வந்தனர். அதனைத் தொடர்ந்து, ‘மை ஜீவன் எயிட் டிரஸ்ட்’ நிர்வாகிகள் மற்றும் காவல்துறையினரின் உரிய உதவியுடன் மகாலிங்கத்தின் உடல் உறவினர்களிடம் முறைப்படி ஒப்படைக்கப்பட்டது. பின்னர், அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படுவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மை ஜீவன் எயிட் டிரஸ்ட் நிர்வாகிகள் முன்னின்று நடத்தியது பொதுமக்களிடையே நல்ல வரவேற்பையும், நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.



