ஈரோடு, ஜூலை 11 –
சமூக சேவைக்காக பத்மபூஷன் விருது பெற்ற உலக சமுதாய சேவா சங்கத் தலைவரும், எஸ்.கே.எம். குழுமத் தலைவருமான எஸ்.கே.எம். மயிலானந்தனுக்கு ஒளிரும் ஈரோடு பவுண்டேஷன், வேளாளர் கல்வி நிறுவனங்கள் மற்றும் சமூகச் சேவை அமைப்புகள் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது. ஈரோடு வேளாளர் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற விழாவுக்கு கலெக்டர் கந்தசாமி தலைமை வகித்தார்.
அப்போது அவர் பேசியதாவது: எளிய குடும்பத்தில் பிறந்த டாக்டர் எஸ்.கே.எம்.மயிலானந்தன் தனது கடின உழைப்பால் தொழில்துறையில் உயர்ந்ததுடன், கடந்த 36 ஆண்டுகளாக நுகர்வோர் சேவை, ஆன்மிக சேவை மற்றும் கிராமப்புற மேம்பாட்டுப் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். அவருக்கு பத்மபூஷண் விருது வழங்கப்பட்டிருப்பது ஈரோடு மாவட்டத்திற்கே பெருமை சேர்ப்பதாகும். இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் முன்னாள் மத்திய அமைச்சர் சுப்புலட்சுமி ஜெகதீசன், பி.வி.பி. பள்ளி தாளாளர் எல்.எம். ராமகிருஷ்ணன், ஈரோடு கலைக் கல்லூரி தாளாளர் கே.கே.பாலுசாமி, சக்தி மசாலா நிறுவனர் பி.சி. துரைசாமி, மக்கள் சிந்தனைப் பேரவை தலைவர் ஸ்டாலின் குணசேகரன், வேளாளர் கல்வி நிறுவனங்களின் செயலாளர் சந்திரசேகர், கொங்கு வேளாளர் தொழில்நுட்ப கல்வி அறக்கட்டளை தலைவர் யு.ஆர்.சி.தேவராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
விழாவில் ஏற்புரையாற்றிய டாக்டர் எஸ். கே.எம்.மயிலானந்தன், சுவாமி விவேகானந்தரின் “சிந்தனைகளால் ஈர்க்கப்பட்டு கிராம மக்களுக்கு சேவை செய்வதே தனது வாழ்வின் நோக்கமாக அமைந்தது. வேதாத்திரி மகரிஷியின் பயிற்சிகள் கிராம மக்களைச் சென்றடைய வேண்டும் என்ற நோக்கில் கிராமிய சேவைத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும், இதுவரை 400 க்கும் மேற்பட்ட கிராமங்கள் தத்தெடுக்கப்பட்டு அங்குள்ள மக்களுக்கு யோகா, தியானம் மற்றும் அறநெறிப் பயிற்சிகள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது. இந்த பத்மபூஷன் விருது மேலும் சேவை செய்யும் ஊக்கத்தை அளித்துள்ளது என்று அவர் கூறினார்.
முன்னதாக ஒளிரும் ஈரோடு அமைப்பின் தலைவர் சின்னசாமி வரவேற்றார். முடிவில் தேசிய நல விழிப்புணர்வு இயக்க செயலாளர் சுந்தரம் நன்றி கூறினார்.



