இரணியல், பிப். 4 –
இரணியல் அருகே நெட்டாங்கோடு கிருஷ்ணவகை சமுதாய பத்திரகாளி அம்மன் மிக பழமையானதாகும். இந்த கோயில் 90 வது ஆண்டு திருவிழா மற்றும் 31 வது ஆண்டு பிரதிஷ்டை திருவிழாவை முன்னிட்டு உலக அமைதிக்காகவும், ஒற்றுமைக்காகவும் , மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்கவும் இந்த பொங்கல் வழிபாடு நடத்தப்படுகின்றது. இந்த ஸ்தலத்தின் ஆதிகால பெயர், காளை மகரிஷி வனம் ஆகும். இங்கு கலைக்கோட்டு மாமுனி வாழ்ந்ததாக ஐதீகம். இந்த அம்மனுக்கு ஆதிகால பெயர் மாலையம்மன். இப்பொழுது பத்திரகாளி அம்மனாக வழிபடுகின்றனர்.
குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் பொங்கல் மற்றும் பூவரசு இலையில் செய்த உப்பில்லாத கொழுக்கட்டை செய்து அம்மனை வழிபட்டால் குழந்தை பாக்கியம் மற்றும் எல்லாவிதமான பிரச்சனைகளுக்கும் இங்கு பரிகாரம் செய்து நிவர்த்தி பெறலாம் என்பது ஐதீகம். எல்லா வருடமும் தை மாதம் புனர்பூசம் நட்சத்திரம் அன்று கமுகு மரம் வெட்டி வந்து கோவில் வளாகத்தில் நட்டு அந்த மரத்தில் திருக்கொடி ஏற்றப்பட்டு வருடாந்தர திருவிழா ஆரம்பமாகும்.
இந்த கோவிலில் பொங்கல் அம்மன் திருவீதிவுலா மற்றும் ஆறாட்டு சிறப்பு வாய்ந்ததாகும். இந்த திருவிழாவின்போது ஊரில் உள்ள மக்கள் எந்த நாட்டில் இருந்தாலும் அனைவரும் ஒன்றாக இங்கு வந்து திருவிழாவை கொண்டாடுவது மேலும் சிறப்பு. இன்று நடந்த நிகழ்ச்சியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் பொங்கலிட்டு வழிபாடு செலுத்தினர்.



