சுசீந்திரம், ஜூலை 22 –
கன்னியாகுமரி மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அவர்கள் உத்தரவின்படி உணவு பாதுகாப்பு துறையின் மாவட்ட நியமன அலுவலர் டாக்டர்.ஜெயராமபாண்டியன் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சங்கரநாராயணன், க.சக்திமுருகன், ரவி, பிரவீன் ரகு, ஜெஃப்ரி ஆகியோர் இணைந்து (21.7.26) கோதநல்லூர், கருங்கல், சடையன் குழி, கண்ணனகம், கொல்லங்கோடு, வெள்ளையம்பலம், நித்திரவிளை, வில்லுக்குறி, இரணியல், கோணம் ஆகிய பகுதிகளில் 46 கடைகளை ஆய்வு செய்தனர்.
ஆய்வின்போது 3 கடைகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட கணேஷ் புகையிலை, கூல் லிப் மற்றும் மெல்லும் புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் செய்தனர். இரணியல், கோணம் பகுதியில் மூன்றாவது முறையாக கணேஷ் மற்றும் கூல் லிப் புகையிலை பாக்கெட்டுகள் 10 கிலோ பறிமுதல் செய்து, இரணியல் காவல்நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து வழக்கு தொடர நடவடிக்கை எடுக்கப்பட்டது.
மூன்றாவது முறையாக குற்றம் புரிந்த இந்த கடைக்கு ஒரு லட்சம் ரூபாயும் மற்ற இரண்டு கடைகளுக்கு 25000 ரூபாயும் உணவு பாதுகாப்புத் துறை மூலம் அபராதம் விதிக்கப்பட்டது. இது போன்ற தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனை குறித்த புகார்களை 9444042322 என்ற வாட்சப் எண்ணிலும் தெரிவிக்கலாம் என்று கன்னியாகுமரி மாவட்ட உணவு பாதுகாப்பு துறையின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



