மார்த்தாண்டம், மார்ச் 9 –
சிதறால் அருகே வெள்ளாங்கோடு பகுதியை சேர்ந்தவர் பிரபா (27). கடந்த 3ம் தேதி இவர் நடந்து சென்று கொண்டிருந்தபோது அந்த வழியாக ஹெல்மெட் அணிந்து பைக்கில் வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் பிரபா கழுத்தில் கிடந்த 9 பவுன் செயினை பறித்துள்ளார். செயின் அறுந்ததில் 7 பவுன் செயின் ஹெல்மெட் அணிந்து வந்தவர் திருடி சென்றதாக பிரபா அருமனை காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து திருடனை தேடி வந்தனர்.
நேற்று முன்தினம் மாங்கோடு சந்திப்பில் வைத்து வாகன சோதனையின் போது சந்தேகத்தின் பேரில் ஒருவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் பெயர் தர்மன் (42) என்பது தெரிய வந்தது. தொடர் விசாரணையில் அவர் இளம் பெண்ணின் தாலியை பறிக்க முயன்றதை ஒப்புக்கொண்டார்.
தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் தர்மனுக்கு மனைவி மற்றும் 2 மகள்கள் மற்றும் ஒரு மகன் இருப்பது தெரிய வந்தது. மகனுக்கு 4 வயதாகும் போது இதயத்தில் பிரச்சனை ஏற்பட்டு, தொடர் மருத்துவ சிகிச்சையில் இருந்து வருகிறார். மருத்துவ செலவுக்கு பணத்திற்கு திணறியதால் செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபடலாம் என முடிவு செய்து, பிரபாவிடம் செயின் பறிக்க முயன்றதை ஒப்புக்கொண்டார்.
ஆனால் செயின் எதுவும் தன்னிடம் சிக்கவில்லை என்று போலீசாரிடம் தர்மன் கூறினார். இதை தொடர்ந்து போலீசார் இளம் பெண்ணின் வீட்டிற்கு சென்று விசாரித்தனர். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் சந்தேகம் அடைந்த போலீசார் பிரபாவின் வீட்டை சோதனை செய்து பார்த்தனர்.
அப்போது அவர் திருட்டு போனதாக கூறிய செயினில் மற்றொரு பகுதி வீட்டில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து பிரபாவை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர். அவர் பொய் புகார் அளித்ததையடுத்து போலீசார் அந்த பெண்ணை எச்சரித்து அனுப்பினர்.


