கோவை, மே 23 –
காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் கணபதி சிவக்குமார் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பாஜக முன்னாள் மாநிலத் தலைவரும், தேசிய பொதுக்குழு உறுப்பினருமான அண்ணாமலை சூலூரில் சிறுமி கடத்தி கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். அது ஜனநாயக அடிப்படையில் கண்டிக்கும் உரிமை கொண்ட விசயம் தான்.
ஆனால் அதற்கு அண்ணாமலை முன்வைக்கும் விசயங்கள் அவரைக் கண்டிக்கத்தக்கவை!அண்ணாமலை திமுக ஆட்சியில் நிலவியது போலவே பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பற்ற சூழல் தொடர்வதாக தெரிவித்துள்ளார். தன் அரசியல் லாபத்திற்காகவும், இழந்துபோன தன் செல்வாக்கை மீட்டு எடுப்பதற்காக அண்ணாமலை இப்படி கருத்து தெரிவித்துள்ளார்.
மத்தியில் பாஜக அரசு ஆட்சிக்கு வந்து முழுதாக 12 ஆண்டுகள் கடந்துவிட்டன. ஆனால் பிரச்னைகளின் போதெல்லாம், முந்தைய காங்கிரஸ் அரசு தான் காரணம் எனச் சொல்லி, அதன் பின்னால் தன் தவறுகளை மறைத்துக் கொள்ளத்துடிப்பது பாஜகவின் வழக்கம்.ஆட்சிக்கு வந்த 12 ஆண்டுகளிலும் பல வரலாற்றுத் தவறுகளையும், மக்களுக்கு விரோத செயல்பாடுகளையும் செய்துவரும் பாஜக அரசு அதற்கு ஒருமுறைகூட பொறுப்பேற்றது இல்லை. ஆனால் ஆட்சிக்கு வந்த இரண்டே வாரங்களில் தவெகவை, முந்தைய திமுக அரசுடன் அண்ணாமலை ஒப்பிட்டுப் பேசுவது எப்படி சரியாக இருக்கும்?
ஆட்சிக்கு வந்த உடன் முதல்வர் விஜய் மூன்று கோப்புகளில் கையெழுத்திட்டார். சூலூர் விவகாரத்தைப் பொறுத்தவரை சிறுமி கொலை வழக்கில் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இது அண்ணாமலைக்கு தெரியாதா? அல்லது தெரிந்தும் தெரியாததுபோல் இருக்கிறாரா?
தவெக அரசும், அதன் முதல்வர் விஜய் எப்போதுமே மக்கள் பணி செய்வதிலேயே கவனம் செலுத்தி வரும் நிலையில் தமிழகத்தில் துடைத்தெறியப்பட்டு இருக்கும் பாஜகவினர் வெற்று வாய்ச் சவடால் பேசும் போக்கை வன்மையாகக் கண்டிக்கிறேன் என்று கூறினார்.



