நாகர்கோவில் ஏப் 20
உலக பாரம்பரிய தினத்தை முன்னிட்டு வட்டக்கோட்டையில் தபால் துறை சார்பாக நடைபெற்ற பாரம்பரிய நடைபயணம்.
உலகளவில் ஆண்டுதோறும் ஏப்ரல் 18-ம் தேதி கொண்டாடப்படும் உலக பாரம்பரிய தினம் இவ்வாண்டு (2025) “பேரழிவுகள் மற்றும் மோதல்கள் பாரம்பரிய இடங்களை எவ்வாறு அபாயத்திற்கு உள்ளாக்குகின்றன” என்ற தலைப்பில் கொண்டாடப்படுகிறது.
இந்த நிகழ்வை முன்னிட்டு இந்திய தபால் துறையின் சார்பில் ஏப்ரல் 17, 2025 அன்று வட்டக் கோட்டையில் பாரம்பரிய நடைபயணம் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிகழ்வில் பால்குளம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் சிறப்பாக கலந்து கொண்டனர்.
18ஆம் நூற்றாண்டில் திருவிதாங்கூர் அரசு கட்டிய கடலோர பாதுகாப்புக் கோட்டையான வட்டக்கோட்டை தமிழ்நாட்டின் முக்கிய பாரம்பரிய பயண இடமாக திகழ்கிறது. அழகான கட்டிடக்கலை, கடல் பார்வை மற்றும் வரலாற்றுப் பின்னணியால் இது சிறப்பிக்கப்படுகிறது.
கன்னியாகுமரி அஞ்சலக கோட்ட கண்காணிப்பாளர் செந்தில்குமார் கொடி அசைத்து நடைபயணத்தை துவக்கிவைத்தார். பின்னர் மக்கள் தொடர்பு அதிகாரி சிவகுமார் இளம் தலைமுறையினருக்கு நிலையான எதிர்காலத்திற்கு பங்களிக்கும் கலாச்சார அடையாளங்கள், முன்னோர்களின் அறிவு மற்றும் மரபுகளைப் பாதுகாப்பதின் முக்கியத்துவத்தை விளக்கினார்.
அஞ்சலக ஆய்வாளர் மகாராஜன், வணிக அதிகாரி ராம்குமார், தொல்லியல் துறை அதிகாரிகள், கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் தபால் துறை ஊழியர்கள் பலர் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.