குளச்சல், மே-20.
மணவாளக்குறிச்சி அருகே உரப்பன விளை என்ற இடத்தை சேர்ந்தவர் முருகேசன் (63) கூலி தொழிலாளி. இவருக்கு ராஜம் என்ற மனைவியும் ஐஸ்வர்யா என்ற மகளும், சந்தோஷ் என்ற மகனும் உள்ளனர். சந்தோஷ் தற்போது அதே பகுதியில் புதிய வீடு ஒன்றை கட்டி வருகிறார்.
கடந்த 11ஆம் தேதி முருகேசன் புதிய வீட்டு மாடி பகுதியில் உள்ள கான்கிரீட் பூச்சுகளில் தண்ணீர் நனைத்துக் கொண்டிருந்தார். அப்போது அவருக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டு, மாடியில் இருந்து கீழே தவறி விழுந்தார். இதில் பலத்த காயம் அடைந்தவரை குடும்பத்தினர் மீட்டு சுங்கான்கடையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இன்றி முருகேசன் இன்று உயிரிழந்தார். இது குறித்து ராஜம் அளித்த புகாரின் பேரில் மணவாளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.