குளச்சல் , மே – 19.
வெள்ளி சந்தை அருகே வடக்கு ஈத்தங்காட்டை சேர்ந்தவர் சுயம்பு (69). கூலித் தொழிலாளி. நேற்று முன்தினம் சுயம்பு மற்றும் அவரது மனைவி விஜயா (62) ஆகிய இருவரும் பேயோடு – குருந்தன்கோடு சாலையில் வீட்டருகே நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது பின்னால் பைக் ஓட்டி வந்த அஜின் (23) என்பவர் சுயம்பு மீது மோதியுள்ளார். இதில் தூக்கி வீசப்பட்டவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
அப்பகுதியினர் அவரை மீட்டு குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று சுயம்பு உயிரிழந்தார். இது குறித்த புகாரின் பேரில் வெள்ளி சந்தை போலீசார் அஜின் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.