தக்கலை, ஜூன் . 3 –
நாகர்கோவில் அருகே ஆசாரிப்பள்ளம் பகுதி சேர்த்தவர் ஜோஸ் ஸ்டீபன் (46). இவரது மனைவி பிரிந்து (37). பிந்துவின் சித்தி களியக்காவிளையில் உடல்நிலை குறைவாக உள்ளதாக தெரிகிறது. அவரை பார்ப்பதற்காக நேற்று முன்தினம் ஜோஸ் ஸ்டீபனும் பிந்துவுமாக மோட்டார் சைக்கிளில் களியக்காவிளை சென்று விட்டு மீண்டும் வீட்டுக்கு புறப்பட்டனர்.
மோட்டார் சைக்கிள் தக்கலை அருகே மணலி பகுதியில் வந்த போது, நிலை தடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து கணவன் மனைவியும் கீழே விழுந்தனர். அப்போது கண்ணிமைக்கும் நேரத்தில் பின்னால் வந்து கொண்டிருந்த அரசு பஸ்சின் சக்கரம் பிந்துவின் மீது ஏறி இறங்கியது. ஆனால் ஜோஸ் ஸ்டீபன் காயமின்றி தப்பினார்.
இதில் படுகாயம் அடைந்த பிந்துவை தக்கலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் பிந்து ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார்கள். இது குறித்து தக்கலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.