மீன்பிடி தடைகால நிவாரணம் தினப்படி கணக்குப்படி ரூ.21000 வழங்குமா அரசு?!
குறும்பனை பெர்லினுடன் தின தமிழ் சிறப்புச்செய்தி
விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்கத் தடைவிதிக்கும் இரண்டு மாதமும் அவர்களுக்கு வழங்கப்படும் நிவாரண தொகையை 6000 ரூபாயிலிருந்து 21000 ரூபாயாக உயர்த்தி வழங்கவேண்டும் என்று நெய்தல் மக்கள் இயக்க குமரி மாவட்டச் செயலாளர் குறும்பனை பெர்லின் தமிழ்நாடு அரசுக்கும் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறைக்கும் கோரிக்கை வைத்துள்ளார்.
இந்த கோரிக்கைபற்றி குறும்பனை பெர்லின் நமது தின தமிழ் செய்தியாளருடன் பேசியதாவது:
விசைப்படகில் சென்று மீன்பிடித்தொழில் செய்யும் மீனவர்கள் ஆண்டிற்கு 60 நாட்கள் மீன்பிடிக்க மத்திய அரசு தடைவிதிக்கிறது. மீன்கள் முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்யும் காலங்களில் இழுவலை தொழில்செய்தால் மீன் குஞ்சுகளும் பெருமளவு இனப்பெருக்கம் செய்ய உருவாகும் முட்டைகளும் அதன் இனப்பெருக்க காலம்வரை தாக்குப்பிடிக்க முடியாமல் அழிந்துவிடுகிறது. இதனால் கடலில் மீன் இனங்களின் உற்பத்தி குறைந்து கடலும் கடல்வளமும் அழிவுப் பாதைக்குச் செல்லும் சூழல் ஏற்படுகிறது. எனவேதான் வருடத்திற்கு இரண்டு மாதம் விசைப்படகு மீனவர்கள் யாரும் மீன்பிடிக்கச் செல்லக்கூடாது என்று மத்திய அரசு இந்தியாவின் அனைத்து கடலோர மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் தடைவிதிக்கிறது. அந்தத் தடையை ஏற்று கடல்சார்ந்த ஒன்பது மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும் தங்கள் மாநில மீனவர்களை அந்தத் தடைகாலங்களில் மீன்பிடிக்க அனுமதிப்பதில்லை.
கன்னியாகுமரி முதல் கல்கத்தா வரையான கிழக்குக் கடற்கரை விசைப்படகு மீனவர்கள் ஏப்ரல் 1 முதல் மே 30 வரை என்று 60 நாட்களும் கன்னியாகுமரி முதல் குஜராத் வரையுள்ள மேற்குக் கடற்கரை விசைப்படகு மீனவர்கள் ஜூன் 1 முதல் ஜூலை 31 வரை 61 நாட்களும் மீன்பிடிக்கத் தடை செய்யப்பட்டுள்ளது. இத்தடைகாலத்தில் மீன்பிடிக்கச் செல்லாமல் இருக்கும் மீனவர்களுக்கு மீனவர் கூட்டுறவு சங்கங்கள் மூலமாக மீன்பிடித் தடைகால நிவாரணமாக ரூ. 6000 வழங்கப்படுகிறது.
இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டபோது 45 நாட்கள் தடைகாலம் என்று அறிவித்து தினப்படி ரூ.100 என்று கணக்கிட்டு மீன்பிடித் தடைகால நிவாரணமாக ரூ.4500 வழங்கப்பட்டது.அதன்பின்பு கடந்த அதிமுக ஆட்சிகாலத்தில் தினப்படி ரூ.250 என்று அறிவித்து நிவாரண உதவியை ரூ. 5000 என்று அறிவித்தார்கள். அப்போதே ரூ.250 தினப்படி கணக்குப்படி 45 நாட்களுக்கும் ரூ.11250 வழங்கியிருக்கவேண்டும். அதன்பின்பு திமுக ஆட்சிக்கு வந்ததும் மீனவர்களின் தினப்படியை ரூ.350 என்று உயர்த்தி அறிவித்தது. மத்திய அரசும் மீன்பிடித் தடைகாலத்தை 45 நாட்களிலிருந்து 60 நாட்களாக உயர்த்தியது. திமுக அரசும் தங்கள் தேர்தல் அறிக்கையில் மீன்பிடி தடைகால நிவாரணத்தை ரூ.8000 வழங்குவதாக அறிவித்துவிட்டு ரூ.6000 மட்டுமே வழங்கியது. இது 1990 களில் இருந்த ரூ.100 தினப்படி அளவிலேயே உள்ளது.
தினப்படியை ரூ.350 என்று அறிவித்துவிட்டு ரூ.100 தினப்படி அளவில் நிவாரணம் வழங்குவது கொடுமையல்லவா? இந்த 100 ரூபாயை வைத்து நான்குபேர் கொண்ட ஒரு குடும்பம் அந்த நாளில் என்ன சாப்பிடமுடியும்? அதனால் ரூ.350 தினப்படி கணக்குப்படி 60 நாட்களுக்கும் ரூ.21000 நிவாரணம் வழங்கவேண்டும் என்று கடந்த நான்கு ஆண்டுகளாக நெய்தல் மக்கள் இயக்கம் தமிழ்நாடு அரசுக்கும் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறைக்கும் கோரிக்கை வைத்துக்கொண்டிருக்கிறோம்.
மீன்பிடித் தடைகால நிவாரணத்தை உயர்த்தி வழங்குவது என்பது அரசின் கொள்கை முடிவுக்கு உட்பட்டது என்று பதில் தந்தார்கள். கடந்த செப்டம்பர் மாதம் குமரி மாவட்ட ஆட்சித்தலைவர் அரசுக்கு அனுப்பிய கருத்துருவில் தினப்படி கணக்குப்படி மீன்பிடி தடைகால நிவாரணத்தை ரூ.21000 வழங்கவேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.
தமிழ்நாடு அரசும் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையும் இனியும் காலதாமதம் செய்யாமல் இந்த ஆண்டு முதலே ரு.350 தினப்படி கணக்குப்படி ரூ.21000 தடைகால நிவாரணம் வழங்கவேண்டும் என்று கோரிக்கை வைக்கிறோம். எங்கள் கோரிக்கை இந்த ஆண்டு நிச்சயம் நிறைவேறும் என்று நம்புகிறோம் என்று குறும்பனை பெர்லின் கூறினார்.