திருப்பத்தூர்:ஆக-01, திருப்பத்தூர் மாவட்ட காவல்துறையில் பொதுமக்கள் அளித்த புகார் மனுக்கள் மீது காவல் நிலையங்களில் முறையான தீர்வு மற்றும் மனுக்களின் மீதான நடவடிக்கைகளில் திருப்தி பெறாத புகார் தாரர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் தலைமையில் மக்கள் குறைதீர் கூட்டம் மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்றது.
முகாமில் கருத்து கேட்பு குழு பிரிவிலிருந்து பெறப்பட்ட திருப்தி அடையாத 12 மனுதாரர்களை நேரில் அழைத்து அவர்களின் குறைகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் காரணம் கேட்டறிந்து அதற்கான உரிய நடவடிக்கை மேற்கொள்ள துணை காவல் கண்காணிப்பாளர்களுக்கு அறிவுரைகள் வழங்கினார்கள். புதியதாக 60 புகார் மனுக்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பொதுமக்களிடம் நேரடியாக பெற்றுக்கொண்டார். மேலும் வாணியம்பாடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மனம் திருந்திய 18 சாராய வியாபாரிகள் இனி வரும் காலங்களில் மது விற்பனையில் ஈடுபட மாட்டோம் எனவும் வாழ்வாதாரத்திற்கு உதவி செய்யுமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம் மனு அளித்தார்கள். இதுவரை திருப்பத்தூர் மாவட்டத்தில் 43 தேர் மனம் திருந்தி சாராய வியாபாரத்தில் ஈடுபட மாட்டோம் என மனு அளித்துள்ளனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களுக்கு அரசால் வழங்கப்படும் உதவிகளை பெற்று தருவதாக உறுதியளித்தார்.
வாரந்தோறும் புதன்கிழமைகளில் திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை சார்பாக மக்கள் குறைதீர் கூட்டம் மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெறும் இக்கூட்டத்தில் மனுக்களின் விசாரணையில் திருப்தி அடையாத புகார்தாரர்கள் நேரில் ஆஜராகி தங்களின் கருத்துக்களை தெரிவிக்கலாம் என மாவட்ட காவல் துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது.