கன்னியாகுமரி,செப்.13-
கன்னியாகுமரி விவேகானந்தர் நினைவு மண்டபத்தில் நடைபெற்று வரும் கட்டுமான பணிகளை தடுத்து நிறுத்திய கும்பல்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கன்னியாகுமரி பேரூராட்சி 1-வது வார்டு கவுன்சிலர் சுபாஷ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் விடுத்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;
சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியில் கடல் நடுவே அமைக்கப்பட்டுள்ள சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபத்தில் சுற்றுலா படகுகளை நிறுத்துவதற்கு படகு தளம் உள்ளது.
அதிக சுற்றுலாப் பணிகள் வருகை தரும் நாட்களில் ஒன்றுக்கு மேற்பட்ட படகுகளை அங்கு நிறுத்தி ,சுற்றுலா பயணிகளை ஏற்றி இறக்க சிரமம் ஏற்பட்டதன் காரணமாக மத்திய அரசின் சாகர்மாலா திட்டத்தின் கீழ் ரூ.10 கோடி மற்றும் தமிழக அரசின் நிதியாக ரூ.6 கோடி என 16 கோடி ரூபாய் செலவில் விவேகானந்தர் நினைவு மண்டபத்தில் படகு தளத்தினை அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.
இந்தப் பணிகளை வாவதுறை பகுதியைச் சார்ந்த சில நபர்கள் நேற்று தடுத்து நிறுத்தியுள்ளனர். விவேகானந்தர் நினைவு மண்டபத்தில் உள்ள படகு தளத்தை அகலப்படுத்தினால் ,தங்களுக்கு மீன் பிடிக்க தடையாக இருக்கும் என பொய்யான குற்றச்சாட்டுகளை கூறி உள்நோக்கத்துடன் வேண்டுமென்றே மேற்படி பணிகளை தடுத்து நிறுத்தி உள்ளனர் .
இவர்கள் மீது காவல்துறை தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.மேலும் நிறுத்தப்பட்டுள்ள பணியினை உடனடியாக தொடங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.