திருப்பூர், செப்.9-
திருப்பூரில் விநாயகர் சதுர்த்தி விழா இந்து முன்னணி சார்பில் இந்து எழுச்சித் திருவிழாவாக வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி முதல் நாளான நேற்று திருப்பூர் பி.என்.ரோடு ராமமூர்த்திநகர் மெயின் ரோட்டில் கணபதி ஹோமத்துடன் விநாயகர் பிரதிஷ்டை செய்யப்பட்டது. மேலும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, இந்து முன்னணியின் சிறுவர்- சிறுமிகள் தினமாக கொண்டாடப்பட்டது. இந்த நிலையில் 2-வது நாளான நேற்று காவிப்படை இளைஞர்கள் விழாவாக கொண்டாடப்பட்டது. இதன் ஒரு பகுதியாக பெண்களுக்கு கோலப்போட்டியும், இளைஞர்களுக்கு உறி அடிக்கும் போட்டியும் நடைபெற்றது.
கோலப் போட்டியை பாஜக மாவட்ட பொதுச் செயலாளரும், மாநகராட்சி கவுன்சிலருமான தங்கராஜ் தொடங்கி வைத்தார். இதில் 50-க்கும் மேற்பட்ட பெண்கள் உற்சாகமாக கலந்து கொண்டு வண்ண, வண்ண கோலமிட்டனர். தமிழர்களின் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் ஜல்லிக்கட்டு கோலம், கேரள மாநில பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் அத்தப்பூ கோலம், திருப்பூர் பின்னலாடை தொழிலுக்கு பெருமை சேர்க்கும் வகையில் பனியன் துணியால் கோலம் உள்பட 50-க்கும் மேற்பட்ட கோலங்கள் அனைவரையும் கவர்வதாக அமைந்திருந்தது. முடிவில் சிறந்த கோலங்களுக்கும், போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. இதில் இந்து முன்னணி மாநில செயலாளர் சண்முகம், மாவட்ட செயலாளர் மணிகண்டன், நகர செயலாளர் சௌந்தர்ராஜன், செயற்குழு உறுப்பினர் பழனிசாமி உள்பட இந்து முன்னணி நிர்வாகிகள், பெண்கள், குழந்தைகள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். 3-ம் நாளான நாளை (திங்கட்கிழமை) இந்து முன்னணியின் அன்னையர் தினமாகவும், நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) இந்த முன்னணியின் சமத்துவ சமுதாய தினமாகவும் கொண்டாடப்படுகிறது.