விளாத்திகுளம், டிசம்பர் 02 –
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் முன்பு இருக்கும் மின் கம்பம் முற்றிலும் சேதம் அடைந்து இப்ப விழுமோ, அப்ப விழுமோ என்ற ஆபத்தான நிலையில் காணப்படுகிறது. மின்கம்பத்தின் சிமெண்ட் பூச்சுகள் பெயர்ந்து மிகவும் சேதம் அடைந்த நிலையில் காணப்படும் இந்த மின்கம்பத்தை மாற்றக்கோரி பலமுறை கோரிக்கை வைத்தும் விளாத்திகுளம் மின்வாரிய அதிகாரிகள் மிகவும் அலட்சியப் போக்கில் செயல்பட்டு வருகின்றனர்.
இப்பகுதியில் பேரூராட்சி அலுவலகம், நூலகம் மற்றும் மருத்துவமனைகள் என முக்கிய சாலைவீதி என்பதால் அதிகப்படியான மக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் சென்று வரக்கூடிய இந்த சாலையில் இவ்வாறு ஆபத்தான நிலையில் இருக்கும் மின் கம்பத்தினால் எப்போது வேண்டுமானாலும் விபத்து ஏற்படக்கூடிய அசாதாரண சூழ்நிலை நிலவி வருகிறது. குறிப்பாக விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் வாயிலின் முன்பு இந்த மின்கம்பம் அமைந்திருப்பதால் அப்பள்ளியில் பயிலும் குழந்தைகளுக்கு மிகப்பெரிய ஆபத்தாக இருந்து வருகிறது.
இதனால் விளாத்திகுளம் மின்சார வாரிய அதிகாரிகள் அலட்சியப் போக்கை கைவிட்டு உடனடியாக போர்க்கால அடிப்படையில் சேதமடைந்த மின்கம்பத்திற்கு பதிலாக புதிய மின்கம்பத்தை மாற்றி பள்ளிக்குழந்தைகள் மற்றும் பொது மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.



