விளாத்திகுளம், நவம்பர் 13 –
தூத்துக்குடி மாவட்டம் எட்டையபுரம் அருகே உள்ள படர்ந்தபுளியில் அப்பகுதியைச் சேர்ந்த 200க்கும் அதிகமான விவசாயிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் 2024-25 பயிர்க்காப்பீடு வழங்காதது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு விவசாயிகளின் விடுதலை தன்னார்வக்குழு ஒருங்கிணைப்பாளர் இராஜசேகரன் தலைமையில் கொட்டும் மழையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். அப்போது அங்கு வந்த எட்டையபுரம் வட்டாட்சியர், காவல் ஆய்வாளர் மற்றும் வேளாண்மைத்துறை அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட முயன்ற விவசாயிகளிடம் போராட்டத்தை கைவிட வேண்டுமென நீண்ட நேரம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது விவசாயிகள் தங்களது கோரிக்கைகளாக, 2024-25ம் ஆண்டில் பெய்த தொடர் கனமழை காரணமாக 100% சேதமடைந்ததற்கான காப்பீட்டுத் தொகையையும், ரூ.59 கோடி நிவாரணத் தொகையும் வழங்க வேண்டும், கடந்த 5 வருடங்களாக விவசாயிகள் விளைவித்த பயிர்களை காட்டுப்பன்றிகள் நாசம் செய்து கொண்டிருப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், கருவேல மரங்களை முற்றிலுமாக அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நூற்றுக்கணக்கான விவசாயிகள் படர்ந்தபுளி பேருந்து நிறுத்தம் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.
இதனால் விளாத்திகுளம் உட்கோட்ட காவல்துறை சார்பில் ஏராளமான போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவியது. இதைத்தொடர்ந்து விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று அதற்கு உரிய தீர்வு காண நடவடிக்கையில் மேற்கொள்வதாக அதிகாரிகள் உறுதி அளித்ததோடு, சமாதான பேச்சு வார்த்தை கூட்டத்திற்கும் ஏற்பாடு செய்ததைத்தொடர்ந்து விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.



