புதுக்கடை , டிச- 23
குமரி மாவட்டம் புதுக்கடை அருகே பார்த்திபபுரத்தில் மிகப் பழமையான பார்த்திபபுரம் பார்த்தசாரதி கோவில் உள்ளது. இந்த கோவிலில் நவம்பர் 13-ம் தேதி இரவு யாரோ மர்ம நபர்கள் கோவில் மதில் சுவரை ஏறி குதித்து, பிரதான கோவிலை உடைத்து கோவில் கருவறைக்குள் இருந்த மிகப் பழமையான 5 கிலோ எடையுள்ள ஐம்பொன் சிலை, மற்றும் வெள்ளியிலான முக கவசம், வெள்ளி அங்கிகளை திருடிச் சென்றுள்ளனர்.
இது போன்று அதே நாளில் புதுக்கடை அருகே மங்காடு பகுதியில் உள்ள பாலதண்டாயுதபாணி கோவில் உள்ளது. அந்த கோவிலில் உள்ள 8 கிலோ எடையுள்ள உத்சவ மூர்த்தி ஐம்பொன் சிலையும் திருடப்பட்டுள்ளது.
இதற்கிடையில் கிடைத்த சிசிடிவி கேமரா பதிவில், இந்த கொள்ளையில் 3 பேர் ஈடுபட்டது தெரிந்தது. அதனடிப்படையில் நடத்திய விசாரணையில், பூதப்பாண்டியை சேர்ந்த மரியசிலுவை, மதுரையை சேர்ந்த பிரேம் , புதுக்கடை பகுதியை சேர்ந்த ரெஜு ஆகியோர் இந்த திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதையடுத்து முதலில் மரிய சிலுவையை பூதப்பாண்டியில் உள்ள அவரது தோட்டத்தில் அவர் பதுங்கி இந்த போது அவரை கைது செய்தனர். அவரை பிடித்து விசாரித்த போது, மதுரையை சேர்ந்த பிரேம் என்பவரிடம் சிலை இருப்பதாக கூறினார்.
இதையடுத்து போலீசார் மதுரையில் உள்ள பிரேம் வீட்டில் வைத்து பார்த்திபபுரம், மங்காடு முருகன் கோவில்களில் திருடிய 2 ஐம்பொன் சிலைகளையும் பறிமுதல் செய்தனர். ஆனால் பிரேம் தலைமறைவானார்.
இதையடுத்து கடந்த நவம்பர் . 22ம் தேதி இரவு திருடப்பட்ட 2 சிலைகள் மற்றும் மரிய சிலுவையுடன் புதுக்கடை போலீஸ் நிலையம் கொண்டு வந்தனர். பின்னர் மரிய சிலுவையை சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கில் மாயமான முஞ்சிறை பகுதி தோட்டவாரம் என்ற இடத்தை சேர்ந்த ரெவி என்பவர் மகன் ரெஜு (34) என்பவரை புதுக்கடை அருகே காப்புக் காடு பகுதியில் வைத்து போலீசார் நவ- .28-ம் தேதி கைது செய்தனர்.
இந்த நிலையில் மாயமான வெள்ளி முக கவசம் தொடர்பாக போலீசார் விசாரித்து வந்தனர். விசாரணையில் இந்த கொள்ளையில் தொடர்புடைய சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பகுதி ஜெகநாதன் மகன் பிரேம் (34) என்பவரை நேற்று முன்தினம் புதுக்கடை சப் இன்ஸ்பெக்டர் கார்த்திக் தலைமையிலான போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து உருக்கி பாராக மாற்றிய இரண்டரை கிலோ வெள்ளியையும் பறிமுதல் செய்து மதுரை சிறையில் பிரேமை அடைத்தனர்.
இதற்கிடையில் நேற்று புதுக்கடை போலீஸ் நிலையத்தில் பறிமுதல் செய்த வெள்ளியை குளச்சல் டி எஸ்பி சந்திரசேகர், இன்ஸ்பெக்டர் ஜானகி முன்னிலையில் ஒப்படைத்தனர். பார்த்திபபுரம் கோவில் கொள்ளையர்கள் 3 பேரும் பிடிபட்டதையடுத்து டிஎஸ்பி அனைவரையும் பாராட்டினார்.