கிருஷ்ணகிரி:அக் 20: கிருஷ்ணகிரி நகராட்சிக்கு உட்பட்ட பழைய வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் ஏராளமான மரங்கள் உள்ளது. பெரும்பாலான மரங்கள் சுமார் 50 ஆண்டுகளுக்கும் பழமையான மரங்களாகும். இங்குள்ள மரங்கள் அவ்வப்போது மழைக்காலங்களில் வேருடன் முறிந்து விழுந்து விபத்து ஏற்படுவது வாடிக்கையாக உள்ளது. இந்நிலையில் கிருஷ்ணகிரியில் பெய்து வரும் கனமழையினால் பழைய வீட்டு வசதி வாரியத்தில் உள்ள பழமையான ராட்சச தைலமரம் ஒன்று வேருடன் சாய்ந்து பயங்கர சத்தத்துடன் விழுந்தது. அருகில் உள்ள குடியிருப்பு வாசிகள் அலறி அடித்து ஓடி வந்து பார்த்தபோது ராட்சச மரம் கார் மீது விழுந்து, கார் நசுங்கி அப்பளம் போல் காட்சி அளித்தன. உடனடியாக அருகில் உள்ளவர்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்ததன் அடிப்படையில், விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் மரத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். அந்த மரம் சாய்ந்து விழும் தருவாயில் உள்ளதை பலமுறை நகராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது அப்பகுதி மக்களின் குற்றச்சாட்டாகும். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு நகராட்சியினர் வந்து அதை பார்வையிட்டு சென்றதாகவும், உடனடியாக அந்த மரத்தை அப்புறப்படுத்தி இருந்தால், இது போன்ற விபத்தை தவிர்த்து இருக்கலாம் என அங்குள்ள பொதுமக்கள் வேதனையுடன் தெரிவித்தனர். ராட்சச மரம் வேருடன் சாய்ந்து அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் மீது விழுந்ததை அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் ஏராளமானவர் பார்த்து செல்வதால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. மாவட்ட நிர்வாகம் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என வாகன உரிமையாளர் கோரிக்கை வைத்துள்ளார். ஏற்கனவே பழைய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் உள்ள ஆபத்தான மரங்களை அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். அதிகாலை என்பதால் எந்தவித உயிர் சேதமும் ஏற்படவில்லை என நிம்மதி பெருமூச்சு விட்டு அப்பகுதி மக்கள் கலைந்து சென்றனர்.



