நாகர்கோவில் ஜன.30.
நாகர்கோவில் மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் அலுவலகத்தில் உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுடைய கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது.
மாவட்டத் தலைவர் ரைமன்ட்
தலைமை தாங்கினார். மாவட்ட அமைப்புச் செயலாளர் வினோத், பொருளாளர் சாந்த சீலன், மார்த்தாண்டம் கல்வி மாவட்டத் தலைவர் பிரைட்சிங் மோரிஸ், நாகர்கோவில் கல்வி மாவட்டத் தலைவர் தினேஷ் ஆன்டன் ஜோஸ்வா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அமைப்பின் மாநிலத் தலைவர் கண்ணன் தொடக்க உரையாற்றினார். மாவட்டச் செயலாளர் டோமினிக் ராஜ்
கோரிக்கைகள் குறித்த விளக்க உரையாற்றினார்.
அரசு விதிகளுக்கு உட்பட்டு தொடக்கப் பள்ளிகளில் நியமிக்கப்பட்ட தகுதியான நியமனங்களுக்கு ஏற்ப்பளிப்பு வழங்குதல்,
இடம் மாறுதல் மற்றும் பதவி உயர்வில் சென்ற தலைமை ஆசிரியர்களுக்கு பணி விடுப்பு ஆணை மற்றும் நியமன ஏற்பளிப்பு வழங்கிட வேண்டி, தொடக்க, நடுநிலை பள்ளிகளில் அங்கீகாரம் புதுப்பித்தலுக்கு தேவையற்ற கால தாமதம் ஏற்படுத்துவதை தவிர்த்தல்,
பணி ஓய்வில் சென்ற ஆசிரியர்களுக்கு சிறப்பு சேமநல நிதி வழங்கிட நிதி ஒதுக்கீடு இல்லை எனக் கூறி ஆண்டு கணக்கில் கிடப்பில் இடப்படுவதைத் தவிர்த்திடல்,
ஆசிரியர்களின் பண பலன் சார்ந்த கோரிக்கைகளை விதிகளுக்கு உட்பட்டு தீர்வு காண்பதற்குப் பதிலாக
தேவையற்ற காரணங்களை குறிப்பிட்டு வட்டார கல்வி அலுவலர்கள் திருப்புவது அல்லது கிடப்பிலிடப்படுவதைத் தவிர்த்து விரைவாக தீர்வு காணக் கேட்டு, ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாப் பணியாளர்களின் ஓய்வு காலப் பணப்பலன்கள் பெற்று வழங்குவதில் மாவட்டக் கல்வி அலுவலர்களின் பொறுப்பற்ற செயல்பாட்டினை முடிவுக்கு கொண்டு வரக் கேட்டு ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி நூற்றுக்கணக்கான ஆசிரியர்களும்
தோழமைச் சங்க நிர்வாகிகளும்
காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் தேசிய பொதுக் குழு உறுப்பினரும்
தமிழ்நாடு அரசு உதவி பெறும் தனியார் பள்ளி ஆசிரியர் அலுவலர் கூட்டமைப்பின் மாநில துணைப் பொதுச் செயலாளருமான சிவ ஸ்ரீ ரமேஷ், மாநிலத் துணைத் தலைவர் சவரி முத்து, தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் மாநில செயற்குழு உறுப்பினர் நாகராஜன்,
கன்னியாகுமரி மாவட்ட ஆசிரியர் இயக்கங்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளரும், தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாவட்டத் தலைவருமான பென்னட் ஜோஸ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
இரவு கஞ்சி காய்ச்சும் போராட்டம் நடைபெற்றது.
வரும் திங்கள்கிழமை பேச்சுவார்த்தை நடைபெறும் என்று அறிவிப்பை தொடர்ந்து காத்திருப்பு போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.
நள்ளிரவு 12 மணி வரை ஆசிரியர்கள் காத்திருந்ததும் கஞ்சி காய்ச்சும் போராட்டம் நடத்தியதும் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.