தூத்துக்குடி மாநகராட்சிக்கு வரிகளை பொதுமக்கள், வணிகர்கள் முறையாக செலுத்த வேண்டும் என்று மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்தார்.
தூத்துக்குடி மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. மேயர் ஜெகன் பெரியசாமி முகாமிற்கு தலைமை வகித்து பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார். ஆணையர் மதுபாலன், துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முகாமை தொடங்கி வைத்து மேயர் பேசுகையில், “கிழக்கு மண்டலத்தில் 2வது முறையாக முகாம் நடக்கிறது. சராசரியாக 100 மனுக்கள் வருகிறது. அதில் 45 மனுக்கள் சொத்துவரி பெயர் மாற்றம் தொடர்பாக வருகிறது. பொதுமக்கள் அளிக்கும் மனுக்களுக்கு ரசீது எண் வழங்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள், நிர்வாக சீர்திருத்தத்திற்கு உதவிகரமாக இருக்கும்.
கிழக்கு மண்டலத்தில் பெரும் பகுதி பஜார் பகுதியாகும். இப்பகுதியில் நெடுஞ்சாலைத்துறை அனுமதியுடன் சாலைகள் செப்பனிடப்படும். இங்கு அப்ரூவல் இல்லாத கட்டிடங்கள் அதிகளவில் உள்ளது. அனுமதி பெற்று புதிய கட்டிடங்கள் கட்ட வேண்டும். சொத்துவரிகளை முறையாக செலுத்த வேண்டும். பொதுமக்களின் ஒத்துழைப்பால் மாநகராட்சிக்கு முதல்வரின் விருது கிடைத்துள்ளது. சுப்பையா பூங்கா பகுதி, தெற்கு மண்டல பகுதியில் 24 மணி நேரமும் குடிநீர் விநியோகம் செய்யப்படும் என்று தெரிவித்தார்.
முகாமில், கிழக்கு மண்டலத்திற்குட்பட்ட 15 வார்டுகளில் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் கலந்து கொண்டு சொத்து வரி நிர்ணயம், சொத்துவரி பெயர் மாற்றம், திருத்தங்கள், புதிய குடிநீர் இணைப்பு,தண்ணீர் கட்டண பெயர் மாற்றம், தண்ணீர் உபயோக கட்டண விகிதங்கள் மாற்றம், கட்டிட அனுமதி, ஆக்கிரமிப்புகள் அகற்றுதல், பொதுச் சுகாதாரம், உரிமை ஆணை கட்டணங்கள், தொழில்வரி, பாதாள சாக்கடை உள்ளிட்ட மாநகராட்சி சேவை குறித்து கோரிக்கை மனுக்களை வழங்கினார்கள். மனுக்கள் மீது ஒரு வாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.உடன் பகுதி கழக செயலாளரும் மாமன்ற உறுப்பினர் சுரேஷ்குமார், மண்டல தலைவர் கலைச்செல்வி மாமன்ற உறுப்பினர் ஜான்சி ராணி ,ரெக்ஸ்லின் பேபி ஏஞ்சலின்,மும்தாஜ் ,ராமு அம்மாள் ரிக்டா பலரும் கலந்து கொண்டனர்