ஆட்சியரகத்தை முற்றுகையிட்டு தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் ஆர்ப்பாட்டம்.
மயிலாடுதுறை தேசிய மேல்நிலைப்பள்ளியில் கடந்த ஆண்டு பணியாற்றிய தலைமை ஆசிரியர் ஓய்வு பெற்றததைத் தொடர்ந்து, அடுத்த தலைமை ஆசிரியராக மூத்த முதுகலை ஆசிரியரான கலைவாணன் என்பவர் பட்டியல் சாதி என்பதால் அவருக்கு அப்பதவியை வழங்காமல், பணி மூப்பின் அடிப்படையில் 8-வது இடத்தில் இருந்த ஆசிரியரை பொறுப்பு தலைமை ஆசிரியராக பள்ளி நிர்வாகம் பணி அமர்த்தியுள்ளதாக குற்றம்சாட்டி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பின்னர், போலீஸாரின் தடையை மீறி ஆட்சியரகத்தின் உள்ளே நுழைந்த தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர், மாவட்ட தலைவர் ஏ.ஆர்.விஜய் தலைமையில் ஆட்சியரக வாசல் முன்பு அமர்ந்து, பள்ளி நிர்வாகத்தின் தீண்டாமை கொடுமையை கண்டுகொள்ளாத மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து தர்னா போராட்டத்தை தொடர்ந்தனர். இதில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு மாநில இணைச்செயலாளர் வாஞ்சிநாதன், விவசாய சங்க மாவட்ட செயலாளர் துரைராஜ், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் ஸ்டாலின், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட செயலாளர் மேகநாதன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட பொருளாளர் நேதாஜி,எஸ் எப் ஐ மாவட்ட செயலாளர் மணிபாரதி, சி ஐ டி யு மாவட்ட செயலாளர் கலைச்செல்வன், மற்றும் வெண்ணிலா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் கோட்டாட்சியர் விஷ்ணுபிரியா பேச்சுவார்த்தை நடத்தினார். இதில்;, திங்கள்கிழமையன்று இரு தரப்பினரையும் அழைத்து அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தி சுமூக தீர்வு காண்பது என முடிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, போராட்டத்தை விலக்கிக் கொண்டு கலைந்து சென்றனர்.