திருப்பூர் ஜூலை: 1
நாம் உண்ணும் உணவே அருமருந்தென அறிந்தவர் நம் தமிழர்கள்,
தமிழர்கள் உடற்கூறுகள் பற்றிய அறிவியலும், மருத்துவம் பற்றி புரிதலிலும் சிறந்து விளங்கினார்கள், உலகத்திலுள்ள பல்வேறு மருத்துவ முறைகளான 1. சித்த மருத்துவம் 2. ஆயுர்வேத மருத்துவம் 3. யுனானி மருத்துவம் 4. அலோபதி மருத்துவம் 5. சீன மருத்துவம் 6. அக்குபங்சர் மருத்துவம் 6. ஆங்கில மருத்துவம் 7. எகிப்திய மருத்துவம் 8. சப்பானிய காம்போ மருத்துவம் 9. கிரேக்க மருத்துவம் 10. அமெரிக்க பூர்வ குடிகளின் மருத்துவம், என மருத்துவ முறைகள் இருந்தாலும் தமக்கென மரபுச் சார்ந்த மருத்துவ முறைகளை உருவாக்கிப் பின்பற்றி வந்துள்ளார்கள்.
தொடக்கக் காலத்தில் மனிதனுக்கு நோய் வந்தபோது இயற்கையாக வளர்ந்த செடி, கொடி, மரவகைகளைக் கொண்டும் அவனுக்கு அருகில் கிடைத்த பொருள்களைக் கொண்டும் வந்த நோயை தீர்த்தான். தாவரங்களின் வேர், தண்டு, பட்டை, இலை, பூ, காய், கனி, முதலியவற்றையே மருந்தாக பயன்படுத்தினான்
”மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்” — 942
இரத்த அழுத்தம் அதிகமானால் வேலிப்பருத்தியையும், சர்க்கரை நோய் அதிகமானால் முருங்கைகீரையையும், கண் சரியாக தெரியவில்லையா பொன்னாங்கண்ணி கீரையையும், வெட்டுப்பட்ட காயத்திற்கு வெட்டுக்கா இலையையும், புகைப்பிடிக்கும் பழக்கமுள்ளவர்களுக்கு அகத்திகீரையையும், குடிகாரர்களுக்கு மஞ்சள் கரிசலாங்கண்ணி கீரையையும் உணவான மருந்தாகவும் பயன்படுத்தினார்கள்.
பழந்தமிழர்கள் மருத்துவத்தை அறிந்தது மட்டுமன்றி, மருத்துவத்தில் சிறந்தும் விளங்கினார்கள் என்பதற்கான குறிப்புகள் பழந்தமிழ் இலக்கியத்தில் உள்ளது. மூலிகை மருத்துவம், அறுவை மருத்துவம், மருந்தில்லா மருத்துவம் போன்றவற்றையும் உடலை வளப்படுத்தி உள்ளத்தை சீராக்கும் யோகம் முதலிய கலைகளையும் அறிந்தவர்கள் தமிழர்கள்.
குறிப்பாக சர்க்கரை, இரத்த கொதிப்பு, புற்றுநோய், மாரடைப்பு முதலிய வாழ்வியல் நோய்கள் பெருகிய நிலையைச் சொல்லலாம் இவற்றை தீர்க்க வெறும் இரசாயன மருந்துகள் போதாது கூடவே உணவு, உடற்பயிற்சி, யோகா என கூட்டாக மேற்க்கொள்ளப்பட வேண்டும் எனவும் தொடர் சிகிச்சைக்கு பிறகு பக்க விளைவுகள் இல்லா மருந்துக்களின் தேவை அவசியமாகும் என்பதற்கான கீரைவகைகளையும் பயன்படுத்த செய்தனர்.
சில நாட்பட்ட நோய்களுக்கு தாவரங்கள் மட்டுமல்லாமல் உலோகங்களையும் பாஷாணங்களையும் மருந்துகளாக பயன்படுத்தினார்கள், மருந்துகளை பயன்படுத்தும்போது மனிதன் தானே என்று ஒரே அளவு மருந்து கொடுக்க முடியாதல்லவா? அவர் எந்த வகை மனிதர், எப்படியான வாழ்வியலில் இருக்கிறார், என்ன மாதிரியான சிக்கலில் வாழ்கிறார், என்ன மாதிரியான எண்ணப்போக்கு உடையவர், அவருடைய உணவு முறை என்ன? அவர் மரபுவழி எப்படிப்பட்டது? என்றெல்லாம் ஆராய்ந்து தான் சிகிச்சைக் கொடுக்க வேண்டும். அந்த வகையில் தமிழர் மருத்துவம் தனித்துவம் மிக்கது.
ஒரு மருந்தை எடுத்துக் கொண்டால் அதற்கு விளைவும் இருக்கும், பக்க விளைவும் இருக்கும், ஆனால் நம் தமிழர்கள் மருத்துவத்தில் பக்க விளைவுகள் இல்லவே இல்லை, அதற்கு காரணம் ”மருந்தே உணவு, உணவே மருந்து” என்பதற்கினங்க மருந்து என்பதே உணவின் நீட்சியாக இருப்பதுதான். ஒரு கவளம் சோற்றை உடல் எப்படி எடுத்துக் கொள்கிறதோ அப்படியே தான் தமிழர் மருத்துவத்திலும், இலேகியத்தையும், சூரணத்தையும் உடல் எடுத்துக்கொள்ளும், அதனால் உணவு எப்படி பக்க விளைவுகளை ஏற்படுத்துவதில்லையோ அதேப்போல தமிழர் மருந்துகளும் பக்க விளைவுகளை ஏற்படுத்துவதில்லை.
தமிழர் மருத்துவம் நோய்க்கான சிகிச்சையை மட்டும் சொல்லாமல் நோய் மீண்டும் வராமலிருப்பதற்கான வாழ்வியலையும் சொல்லிருக்கிறது.
”நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல்” –948
திருக்குறலின்படி நோய் மட்டுமன்றி் அதன் காரணிகளையும் கண்டறிந்து ஒருவரை நோயில்லாத மனிதராக்குவார்கள் தமிழர்கள். தினமும் நாற்பத்தைந்து நிமிடத்தில் மூன்று கி.மீட்டர் நடைப்பயணம், பதினைந்து நிமிடம் யோகா, தியானம், மூச்சுப்பயிற்சி 1:4:2 விகிதத்திலும் மற்றும் ஏழுமணி நேரம் உறக்கம் ஆகியவை அவசியம். எங்கோ விளையும் ஆப்பிளையும், ஆரஞ்சையும் சாப்பிடுவதைவிட, நமது ஊரின் மண்ணில் விளையும் கொய்யா, பப்பாளி, நெல்லி, நாவல், வாழைப்பழம் ஆகிய பழங்களை காலை உணவாக சாப்பிடலாம்.
நோய்கள் பல வந்து தாக்கியபிறகு அதனைப்பற்றி கவலைக் கொள்வதில் எந்த பயனும் இல்லை. இன்று வேலை வேலை என்று பொருளாதார நிலையை மட்டும் யோசிக்கிறார்களே தவிர மனிதனுடைய உடல் ஆரோக்கியம் பற்றி யாரும் நினைத்துப் பார்ப்பதில்லை.
தாகம், பசி எடுக்கும் அளவிற்கு உழையுங்கள், அல்லது உடற்பயிற்சி செய்யுங்கள், உணவு உண்பதில் சில ஒழுக்கங்களை கடைபிடியுங்கள், மனிதன் பதிமூன்று நாட்கள் தண்ணீர் குடிக்காமலும், இருபத்தியாறு நாட்கள் உணவு உண்ணாமலும் வாழலாம், பயப்பிடாதீர்கள், கவலைக் கொள்ளாதீர்கள், நோய் வந்தபின்பு மருந்துகளை எடுத்துக் கொள்வதைவிட வருமுன் காக்கும் வாழ்க்கையை வாழக் கற்றுக் கொள்ளுங்கள். தினமும் உடற்பயிற்சி, முறையான உணவு, முறையான ஓய்வு மிகவும் அவசியம். எளிமையாக கிடைக்கக்கூடிய காய்கறிகள், கீரைவகைகள், பழங்கள், சிறுதானியங்களை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
கணினித்திரையும், கைப்பேசியும் தேவைக்கு பயன்படுத்தி, தேவையற்றபோது தவிர்த்து நாள்தோறும் ஓடியாடி விளையாடுங்கள், வயதைப்பற்றியோ, பிறர்களைப் பற்றியோ கவலைப்படாதீர்கள், உரிய நேரத்தில் உண்ணவும், உறங்கவும் மறவாதீர்கள், அதிகாலையில் விழித்தெழுந்து அற்புதமான வாழ்வை எட்டினால் எந்த நோயும் அண்டாது. இன்புற்று வாழுங்கள் இயன்றவரை…
சமூக ஆர்வலரும் எழுத்தாளருமான
முத்தமிழ் அறிஞர் டாக்டர் சி.சிவானந்தம்.