மதுரை அக்டோபர் 9,
மதுரை காமராஜர் பல்கலைக்கழக தொலை நிலைக்கல்வி இயக்கத்தில் தமிழ் வழிக்கல்வியில் பயின்று
முறைகேடாக அரசுப்பணி பெற்றவர்கள் மீது வழக்குப்பதிவு
கடந்த 2020 ஆம் ஆண்டில் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வு வாரியத்தின் சார்பில் நடைபெற்ற குரூப் 1 தேர்வில், தமிழ் வழிக்கல்வியில் பயின்றோருக்கான பணி ஒதுக்கீட்டில் அரசுப்பணி பெற்ற சிலர் தேர்வில் முறைகேடு செய்திருப்பதாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்குத் தொடரப்பட்டது. வழக்கு விசாரணை நடத்தும்படி மதுரை ஊழல் தடுப்புப் பிரிவுக்கு உத்தரவிடப்பட்டது.
அதன்பேரில் மதுரை ஊழல் தடுப்புப்பிரிவினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், மதுரை காமராஜர் பல்கலைக்கழக தொலை நிலைக்கல்வி இயக்கத்தில் தமிழ் வழிக்கல்வியில் பயின்று தேர்ச்சி பெற்று குரூப் 1 தேர்வில் அரசுப்பணி பெற்ற 4 பேர் முறைகேட்டில் ஈடுபட்டிருப்பது தெரிய வந்தது. இதில் மதுரையில் வணிக வரித்துறை உதவி ஆணையராக பணிபுரிந்து வரும் சொப்னா (மாற்றுப்பாலினத்தவர்), கோவை மாவட்ட ஆட்சியரின் தனி உதவியாளராக பணிபுரிந்து வரும் என். ஏ. சங்கீதா, ஆத்தூர் காவல் துணைக்கண்காணிப்பாளராக பணிபுரிந்து வரும் கே. சி. சதீஷ்குமார், காஞ்சிபுரம் பயிற்சி வருவாய் கோட்டாட்சியராக உள்ள எம். கலைவாணி ஆகிய நால்வரும் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளனர்.
இவர்கள் நால்வருக்கும் முறைகேடாக தமிழ் வழிக்கல்வி சான்றிதழ் வழங்கியதற்கு உடந்தையாக இருந்தவர்கள் உள்ளிட்ட 9 பேர் மீதும், மதுரை ஊழல் தடுப்புப்பிரிவு காவல்துறையினர் முறைகேடாக அரசுப்பணி பெற்றது. உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.