கன்னியாகுமரி ஜன 2
ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு அஞ்சுகிராமம் ஸ்ரீ அழகிய விநாயகர் ஆலயத்தில் சிறப்பு அபிஷேக பூஜையும், பொதுமக்கள் நலம் கருதி விசேஷ நவக்கிரக பூஜையும் நடைபெற்றது.
குமரி மாவட்டம் அஞ்சு கிராமத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்ரீ அழகிய விநாயகர் ஆலயத்தில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு விநாயகருக்கு பால், பழம், பன்னீர், இளநீர், தேன் உள்ளிட்ட 16 வகையிலான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
அதனை தொடர்ந்து ரோஜா, பிச்சி, முல்லை, மல்லிகை உள்ளிட்ட பல்வேறு வகையான மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. பின்னர் வள்ளி தெய்வானையோடு அமர்ந்துள்ள சுப்பிரமணிய சுவாமிக்கும், ஐயப்ப சுவாமிக்கும் சிறப்பு அலங்கார பூஜை நடைபெற்றது. ஸ்ரீ ராமர் ஆஞ்சநேயர் மற்றும் காலபைரவருக்கும் சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடைபெற்றது.
இந்தப்புத்தாண்டில் உலகப் பொதுமக்கள் எல்லோருக்கும் எவ்வித பாதிப்புகளும் ஏற்படாமல் இருக்க வேண்டி ஆலய அறங்காவல் குழு தலைவர் வாரியூர் நடராஜன் தலைமையில், செயலாளர் காணிமடம் தங்கப்பாண்டியன் ஆசிரியர், பொருளாளர் மேட்டுக்குடி முருகன், செயற்குழு உறுப்பினர்கள் வீடியோகுமார், பரஞ்சோதி ஆகியோர் முன்னிலையில்
சூரியன், செவ்வாய், குரு, சனி உள்ளிட்ட நவகிரகங்களுக்கு ஆலய குருக்கள் கணேசபட்டர் விசேஷ பூஜைகளை செய்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். ஆலயம் சார்பில் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.