தக்கலை, அக் – 2
திருவிதாங்கூர் மன்னர் ஆட்சி காலத்தில் குமரி மாவட்டத்தில் உள்ள பத்மனாபபுரம் அரண்மனையில் ஆண்டுதோறும் நவராத்திரி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வந்தது. பின்னர் சுவாதி திருநாள் மகாராஜா காலத்தில் இந்த விழா திருவனந்தபுரத்துக்கு மாற்றப்பட்டது. அதன் பின்பு இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் குமாரகோவில் முருகன் மற்றும் பத்மனாபபுரம் தேவார கட்டு சரஸ்வதி அம்மன் ஆகிய சாமி சிலைகள் ஊர்வலமாக
திருவனந்தபுரம் கொண்டு செல்வது வழக்கம். பின்னர் அங்கு நவராத்திரி விழா பூஜை பங்கேற்ற பின்பு சாமி சிலைகளை மீண்டும் குமரி மாவட்டத்துக்கு கொண்டு வழக்கம்.
இதையொட்டி நேற்று முன்தினம் சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் ஊர்வலமாக புறப்பட்டு அன்று மாலை பத்மனாபபுரம் நீலகண்ட சாமி கோவிலில் வந்தது. நேற்று காலை 7.30 மணிக்கு பத்மனாபபுரம் அரண்மனையில் உப்பரிகை மாளிகையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள மன்னர் மார்த்தாண்டவர்மா உடைவாளை மாற்றும் நிகழ்ச்சி நடந்தது.
கேரள அறநிலையத்துறை அமைச்சர் வாசவன் முன்னிலையில் தொல்லியல் துறை அமைச்சர் கடனப்பள்ளி ராமசந்திரன் உடைவாளை எடுத்து குமரி மாவட்ட திருகோயில்கள் இணை ஆணையர் பழனிகுமாரிடம் உடைவாளை ஒப்படைத்தார். அவர் அரண்மனை ஊழியரிடம் ஒப்படைத்தார்.
தொடந்து முன்னுதித்த நங்கையம்மன் பல்லக்கிலும் வேளிமலை முருகன் வெள்ளி குதிரை வாகனத்திலும் தேவார கட்டு சரஸ்வதி அம்மன் யானையிலும் எழுந்தருளி பூஜைகள் செய்யப்பட்டு பிடி அரிசி காணிக்கையுடன் புறப்பட்டது.
ஊர்வலம் தக்கலை, கேரளபுரம், திருவிதாங்கோடு, அழகிய மண்டபம், முளகுமூடு, மார்தாண்டம் வழியாக இரவு குழித்துறை மகாதேவர் கோவில் சென்றது.
அங்கிருந்து சாமி சிலைகள் மீண்டும் இன்று (2 -ம் தேதி) காலையில் ஊர்வலமாக புறப்பட்டு களியக்காவிளை சென்றடையும். அங்கு கேரளா போலீசார் மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் சாமி சிலைகள் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடைபெறும் .
பத்மனாபபுரம் அரண்மனையில் நடந்த உடைவாள் மாற்றும் நிகழ்வில் கன்னியாகுமரி கலெக்டர் அழகு மீனா, பாறசாலை எம்.எல்.ஏ ஹரீந்திரன், கோவளம் எம்.எல்.ஏ வின்சென்ட், முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதா கிருஷ்ணன் , தாசில்தார் சஜீத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.