மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணியாற்றி வரும் தூய்மை பணியாளர்களுக்கு ஆறு மாதங்களாக சம்பளம் வழங்கப்படாததை கண்டித்து ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் வாசலில் தரையில் அமர்ந்து தூய்மை பணியாளர்கள் தர்ணா போராட்டம்:-
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகமானது மயிலாடுதுறை மன்னம்பந்தல் ஊராட்சியில் புதிதாக கட்டப்பட்டு கடந்த ஆறு மாதங்களாக செயல்பட்டு வருகிறது. இதையடுத்து புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தூய்மை பணியாளர்கள் 57 பேர் ரூ.5000 சம்பளத்தில் தற்காலிக ஊழியர்களாக பணியமர்த்தப்பட்டனர். இரண்டு மாதங்கள் கடந்த பின்னர் அவர்களில் 15 பேர் ஆட்குறைப்பு செய்யப்பட்டு தற்போது எஞ்சியவர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் தூய்மை பணியாளர்கள் அனைவருக்கும் கடந்த ஆறு மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை. இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் அவர்களுக்கு சம்பளத்தொகை வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த தூய்மை பணியாளர்கள் 25க்கு மேற்பட்டோர் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் ஆட்சியர் அலுவலக அதிகாரிகள் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி மாவட்ட ஆட்சியரிடம் பிரச்னையை தெரியப்படுத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து தூய்மை பணியாளர்கள் மாவட்ட ஆட்சியரை தற்போது சந்தித்து தங்கள் குறைகளை தெரிவித்து வருகின்றனர்.