திருவாரூர்
மார்ச் 10
தமிழ்நாடு முதலமைச்சர் சென்னையில் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு நேரடி வங்கிக்கடன் வழங்கும் விழாவில் மகளிர் சுய உதவிக்குழுகளுக்கு வங்கிக்கடனுதவிகளை வழங்கினார்கள். அதனைத்தொடர்ந்து, திருவாரூர் மாவட்டம், காட்டூர் அஞ்சுகம் அம்மையார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடனுதவி வழங்கும் விழாவில் 1235 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.102.3924 கோடி வங்கிக்கடனுதவிகளை திருவாரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் வ.மோகனச்சந்திரன், திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி.கே.கலைவாணன் ஆகியோர் வழங்கினார்கள்.
தமிழகத்தில் மகளிர் மேம்பாட்டு நிறுவனம் 1989 துவங்கப்பட்டு ஒவ்வொரு மாவட்டத்திலும் இதற்கான அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டு ஏழ்மை நிலையில் இருக்கும் குடும்பங்களில் உள்ள மகளிர்களை ஒருங்கிணைத்து சுய உதவிக் குழுக்கள் ஆரம்பிக்கப்பட்டது. தற்போது தமிழ்நாட்டில் இலட்ச கணக்கில் சுய உதவிக்குழுக்கள் அமைக்கப்பட்டு மகளிர் இயக்கங்களாக செயல்பட்டு வருகிறது.
சுய உதவிக்குழுவில் உள்ள உறுப்பினர்கள் சுயசார்பு தன்மை அடைந்திடவும், வருவாய் பெருக்கும் தொழில்களில் ஈடுபடவும் அரசின் மூலம் ஒவ்வொரு ஊராட்சியிலும் கிராம வறுமை ஒழிப்பு சங்கம், மகளிர் சுய உதவிக்குழுக்களை ஒருங்கிணைத்து ஊராட்சி அளவில் மகளிர் குழு கூட்டமைப்பு உருவாக்கப்பட்டு சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு வங்கி நேரடி கடன் வங்கி பெருங்கடன், சமுதாய முதலீட்டு நிதி கடன், சுழல் நிதி, வட்டார வள வணிக மையம் உருவாக்கப்பட்டு அவர்கள் மூலம் தொழில் வளர்ச்சி நிதி விவசாயத்தில் ஈடுபடும் பெண்களுக்கு ஒருங்கிணைந்த விவசாய பண்ணை தொகுப்பு, இயற்கை விவசாய பண்ணை தொகுப்பு மற்றும் உற்பத்தி குழுக்கள் உருவாக்குதல் விவசாயம் சாராத தொழில்களுக்கு சமுதாய திறன் பள்ளி, சிறிய அளவிலான தொழில் தொகுப்பு, மாவட்ட தொழில் மையம் உதவியுடன் ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளால் உணவு சார்ந்த தொழில்களுக்கு கடன் வழங்குதல், வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் மூலம் இணை மானிய நிதி திட்டம், சமுதாய திறன் பள்ளி, சமுதாய விவசாய பள்ளி, மதி சிறகுகள் மற்றும் விவசாய உற்பத்தி நிறுவனங்கள் உருவாக்கப்பட்டு அதன் மூலம் வறுமையில் இருந்து விடுபட பல்வேறு நலத்திட்டங்களை அரசு செய்து வருகிறது.
இதன் மூலம் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை விற்பனை செய்வதற்காக கல்லூரி சந்தை கண்காட்சி மற்றும் விற்பனைகள், மதி அனுபவ அங்காடி, வணிக வளாகங்கள், சிறு விற்பனை நிலையங்கள் மற்றும் மதி நடமாடும் வாகனங்கள் ஆகியவைகள் செய்து தரப்படுகிறது.
ஊரக சுய உதவிக்குழு வங்கி கடன் 11736 உறுப்பினர்கள் உள்ளடங்கிய 978 குழுக்களுக்கு ரூ.82.18 கோடி மதிப்பீட்டிலும், பெருங்கடன் 744 உறுப்பினர்கள் உள்ளடங்கிய 8 குழுக்களுக்கு ரூ.5.57 கோடி மதிப்பீட்டிலும், நகர்புறம் சுய உதவிக்குழு வங்கி கடன் 2288 உறுப்பினர்கள் உள்ளடங்கிய 176 குழுக்களுக்கு ரூ.14.00 கோடி மதிப்பீட்டிலும், வாழ்ந்து காட்டுவோம் திட்டம் இணை மானியமாக 6 உறுப்பினர்கள் உள்ளடங்கிய 6 குழுக்களுக்கு ரூ.0.1580 கோடி மதிப்பீட்டிலும், வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் 90 உறுப்பினர்கள் உள்ளடங்கிய 67 குழுக்களுக்கு ரூ.0.480 கோடி மதிப்பீட்டிலும் என 14864 உறுப்பினர்கள் உள்ளடங்கிய 1235 குழுக்களுக்கு ரூ.102.3924 கோடி மதிப்பீட்டில் கடன் மாவட்ட ஆட்சித்தலைவர் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினரால் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில், வருவாய் கோட்டாட்சியர் சௌம்யா, மகளிர் திட்டம் திட்ட இயக்குநர் பொன்னம்பலம், முன்னோடி வங்கி மேலாளர் ரெங்கநாதபிரபு உள்ளிட்ட அரசு அலுவலர்கள், வங்கி கிளை மேலாளர்கள் கலந்து கொண்டனர்.



