கருங்கல், மே.15-
கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, திப்பிறமலை ஊராட்சியில் உள்ள திப்பிறமலை – ஈத்தங்காடு சாலை சீரமைத்து பல வருடங்கள் ஆகியதாலும், புயல் மற்றும் பெரு கனமழையினாலும் சாலைகள் மிகவும் மோசமான நிலையில் பழுதடைந்து பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் காணப்பட்டது.
இந்த பழுதடைந்த சாலைகளை சீரமைக்க வேண்டும் என்று கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ் குமார் தொடர்ந்து கோரிக்கை வைத்ததன் அடிப்படையில் ரூ.68.36 லட்சம் நபார்டு மற்றும் கிராமச் சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதனையடுத்து நேற்று திப்பிறமலை பகுதியில் வைத்து திப்பிறமலை – ஈத்தங்காடு சாலை சீரமைக்கும் பணிகளை ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் கருங்கல் கிழக்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் இராஜசேகரன், திப்பிறமலை ஊராட்சி காங்கிரஸ் கமிட்டி தலைவர் பிறைட் என்ற சதீஷ் குமார் மற்றும் பொது மக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



