தென்காசி மாவட்டம், தென்காசி அருகே உள்ள மத்தளம்பாறை பகுதியைச் சேர்ந்த கதிரேசன் (வயது 34) என்ற கார் ஓட்டுநர் தனது 3 சென்ட் நிலத்தில் கடைகளை கட்டி தொழில் நடத்த திட்டமிட்டு அந்த இடத்தில் வணிக கடைகள் கட்டுவதற்கான தரிசு நில சான்று தர கோரி தென்காசி தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பம் செய்துள்ளார்
இந்த நிலையில் அவரது விண்ணப்பமானது மத்தளம்பாறை கிராம நிர்வாக அலுவலருக்கு சென்ற நிலையில் அவர் தரிசனம் சான்றுக்கான ஒப்புதல் கொடுத்துள்ளார்.
தொடர்ந்து அடுத்த கட்டமாக அந்த விண்ணப்பமானது தென்காசி வருவாய் ஆய்வாளர் தர்மராஜுக்கு சென்றுள்ளது.
அதனை தொடர்ந்து கதிரேசன் வருவாய் ஆய்வாளரான தர்மராஜை சென்று பார்த்தபோது தரிசு நில சான்று வழங்க வேண்டும் என்றால் ரூ.20,000 பணம் கொடுக்க வேண்டும் எனக்கூறி அந்த விண்ணப்பத்தை கிடப்பில் போட்டுள்ளார்.
உடனடியாக கதிரேசன் தான் சாதாரண தனியார் வாகன ஓட்டுனர் எனவும் தன்னால் ரூ.20,000 பணமெல்லாம் கொடுக்க முடியாது எனவும் கூறவே படிப்படியாக குறைந்து ரூ.5,000 வரை பேரம் பேசி உள்ளார்.
இந்த நிலையில் தனது வாழ்வாதாரம் கருதி எப்படியாவது கடைகளை கட்ட வேண்டும் என எண்ணிய கதிரேசன் இது தொடர்பாக தென்காசி மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறையிலும் புகார் ஒன்றை அளித்துள்ளார்.
அந்த புகாரின் அடிப்படையில் தென்காசி மாவட்ட லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி பால்சுதர் தலைமையிலான அதிகாரிகள் கதிரேசனிடம் ரூ.5 ஆயிரம் ரசாயனம் தடவிய பணத்தை கொடுத்து வருவாய் ஆய்வாளரான தர்மராஜிடம் கொடுக்க வைத்தனர்.
அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும், களவுமாக வருவாய் ஆய்வாளர் தர்மராஜை பிடித்து கைது செய்தனர்.
குறிப்பாக
தமிழக முழுவதும் பல்வேறு பகுதிகளில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தி வரும் நிலையில் தென்காசி நகரப்பகுதியில் உள்ள வருவாய் ஆய்வாளர் ஒருவர் ரூ.5 ஆயிரம் லஞ்சம் பெற்ற குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.