தென்காசி மாவட்டம்
குற்றாலத்தில் தொழிலாளர்களுக்கு புதுப்பிக்கப்பட்ட ஓய்வு இல்லம் அமைச்சர் கணேசன் திறந்து வைத்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைக்கிணங்க தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் அமைப்புசார் தொழிலாளர்கள் , குடும்பத்தினர்கள் மற்றும் பொது மக்களின் பயன்பாட்டிற்காக ரூ.1.82 கோடி மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்ட திரு.வி.க. தொழிலாளர் ஓய்வு இல்லத்தினை தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன் திறந்து வைத்து பார்வையிட்டார்.
தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியத்தின்கீழ் தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் திரு.வி.க. இல்லம் எனும் தொழிலாளர்களுக்கான ஓய்வு இல்லம் 1983ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது.
இந்த திரு.வி.க. தொழிலாளர் ஓய்வு இல்ல வளாகம் 2 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இவ்வில்லத்தில் இரண்டு படுக்கைகள் கொண்ட 8 அறைகள், எட்டு படுக்கைகள் கொண்ட 7 பொது அறைகள், இருபத்து நான்கு படுக்கைகள் கொண்ட பொது அறை ஒன்று என மொத்தம் 96 நபர்கள் தங்கி பயன்பெறும் வகையில் செயல்பட்டு வருகிறது. இந்த ஓய்வு இல்லத்தை அனைத்து தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.
இந்த ஓய்வு இல்லக் கட்டடம் பழுதடைந்த நிலையில் இருந்தமையால் மாண்புமிகு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் கணேசன் சட்டமன்றப் பேரவை மானியக் கோரிக்கையின் போது தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியத்தின்கீழ் தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் உள்ள திரு.வி.க. இல்லம் ரூ.1.82 கோடி செலவில் புதுப்பிக்கப்படும் என அறிவித்தார்.
அதனைத் தொடர்ந்து திரு.வி.க. இல்லக் கட்டடத்தில் பொதுப்பணித் துறை மூலம் ரூ.1,82,17,500/- செலவில் புதுப்பித்தல் பணிகள் மேற்கொள்ளப்பட்டு அமைப்புசார் தொழிலாளர்கள், குடும்பத்தினர்கள் மற்றும் பொது மக்கள் பயன்பாட்டிற்காக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் கணேசன் திறந்து வைத்தார். மேலும் இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியத்தில் தொழிலாளர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தை சார்ந்த 26 பயனாளிகளுக்கு ரூ.10,85,000/- மதிப்பிலான கல்வி, திருமணம், இயற்கை மற்றும் விபத்து மரணம் ஆகிய நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. கடந்த மூன்று ஆண்டுகளில் 30,134 தொழிலாளர்களுக்கு ரூ.12.54 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் இவ்வரசு இலட்சக்கணக்கான தொழிலாளர் நலன் காக்கின்ற அரசாக செயல்பட்டு வருகிறது என தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், தொழிலாளர் நலன் மற்றும் திறன்மேம்பாட்டுத் துறை அரசு செயலாளர் வீர ராகவ ராவ், தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் கமல் கிஷோர், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குநர் விஷ்ணு சந்திரன், தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார் , சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா , வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் சதன் திருமலைக்குமார் மற்றும் தமிழ்நாடு தொழிலாளர் நல வாரிய செயலாளர் செந்தில்குமாரி, மதுரை கூடுதல் தொழிலாளர் ஆணையர் உமாதேவி , திருநெல்வேலி தொழிலாளர் இணை ஆணையர் சுமதி , தமிழ்நாடு தொழிலாளர் நல வாரிய உறுப்பினர் அன்பு ராஜன் மற்றும் தொழிலாளர் துறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.