சிவகங்கை டிச:06
சிவகங்கை மாவட்டத்திலிருந்து கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன். ஃபெஞ்சல் புயலினால் பாதிக்கப்பட்டுள்ள விழுப்புரம் மாவட்டத்தை சார்ந்த பொதுமக்களுக்கு உதவிடும் வகையில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் சார்பில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்திலிருந்து முதற்கட்டமாக நிவாரணப் பொருட்களை கனரக வாகனங்கள் மூலம் அனுப்பி வைத்தனர்.
இதனைத் தொடர்ந்து கூட்டுறவுத்துறை அமைச்சர் தெரிவிக்கையில்
ஃபெஞ்சல் புயலினால் கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னைக்கு அருகிலுள்ள சில மாவட்டங்களைச் சார்ந்த பொதுமக்கள் பாதிப்புக்குள்ளாகினர். தமிழ்நாடு முதலமைச்சரின் உத்தரவின்படி போர்க்கால அடிப்படையில் அனைத்து சீரமைப்பு பணிகளும் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு மேற்கண்ட பகுதிகளை சார்ந்த பொதுமக்கள் தற்போது இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றனர்.
மேலும் அம்மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள பாதிப்புக்களை சீர் செய்வதற்கு அரசுடன் இணைந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலுள்ள பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்களும் தங்களது பங்களிப்பினை ஏற்படுத்தி வருகின்றனர்.
அந்தவகையில் சிவகங்கை மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் கனரக வாகனங்கள் மூலம் பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களான
அரிசி- 5 கிலோ துவரம் பருப்பு – 1 கிலோ சர்க்கரை – 1 கிலோ சமையல் எண்ணெய் – 1 லிட்டர், உப்பு- 1 கிலோ மிளகாய்த்தூள் மல்லித்தூள் சாம்பார் தூள் ரசப்பொடி கடுகு சீரகம் மிளகு வெந்தயம் மஞ்சள் தூள் டீ தூள் ஆகியவைகள் தலா 100 கிராம் காபி தூள் 2 பாக்கெட் கோதுமை மாவு – 1 கிலோ புளி ½ கிலோ தீப்பெட்டி – 1 பாக்கெட் என மொத்தம் 19 வகையான நிவாரணப் பொருட்கள் என தலா ரூ.1,200/- வீதம் முதற்கட்டமாக 2,000 குடும்பங்களுக்கு மொத்தம் ரூ.24.00 இலட்சம் மதிப்பீட்டில் சிவகங்கை மாவட்டத்தின் மூலம் விழுப்புரம் மாவட்டத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து அரசின் பல்வேறு துறைகளைச் சார்ந்த அலுவலர்கள் வாயிலாகவும் பொதுமக்கள் தன்னார்வலர்கள் நன்கொடையாளர்கள் ஆகியோர்களின் பங்களிப்புடனும் நிவாரணப் பொருட்கள் வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுபோன்று அரசுடன் இணைந்து நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்கு அனைத்து தரப்பினரும் உறுதுணையாக இருந்திட வேண்டும் எனத் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் திட்ட இயக்குநர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) கா.வானதி உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) கேசவதாசன் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் செயற்பொறியாளர் அனுராதா திருப்புவனம் பேரூராட்சி தலைவர் த.சேங்கைமாறன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.