ஈரோடு நவ 19
ஈரோடு மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜ கோபால் சுன்கரா தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் வீட்டுமனை, பட்டா மாறுதல், முதியோர் உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, ஆக்கிரமிப்பு, சாலை, குடிநீர் வசதி வேண்டி, கழிவு நீர் கால்வாய் தூர்வாருதல் மற்றும் காவல் துறை நடவடிக்கை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம் 315 மனுக்கள் வரப்பெற்றன. பொதுமக்கள் அளித்த பல்வேறு கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பெற்று உரிய துறை அலுவலர்களிடம் வழங்கி அவற்றின் மீது உடனடி நடவடிக்கை எடுத்திட உத்தரவிட்டார். மேலும், முதலமைச்சர் தனிப்பிரிவு மனுக்கள், மாண்புமிகு அமைச்சர் முகாம் மனுக்கள், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து, மாவட்ட ஆட்சித்தலைவர் ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு நிகழ்வுகளில் உயிரிழந்த நபர்களின் வாரிசுதார்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.1இலட்சம் வீதம் ரூ.3 இலட்சம் மதிப்பீட்டில் நிவாரண உதவிகளை வழங்கினார்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் சாந்த குமார், உதவி ஆட்சியர்
(பயிற்சி)ராமகிருஷ்ணசாமி மாவட்ட வழங்கல் அலுவலர் ராம்குமார்,
தனித்துணை ஆட்சியர் செல்வராஜ், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும்
பழங்குடியினர் நல அலுவலர் ராஜகோபால், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும்
சிறுபான்மையினர் நல அலுவலர் சக்திவேல், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர்
.பூபதி உட்பட அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.