கன்னியாகுமரி நவ 9
கன்னியாகுமரி மற்றும் விவேகானந்த புரம் பகுதியில் உள்ள உணவகங்கள் பேக்கரிகள் மளிகை கடைகளில் மாவட்ட ஆட்சியர் அவர்களின் உத்தரவு மற்றும் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் டாக்டர்.செந்தில்குமார் அறிவுரையின்படி அகஸ்தீஸ்வரம் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் க.சக்திமுருகன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.ஆய்வின்போது குளிர்பதன பெட்டியில் மறு உபயோகத்திற்கு வைக்கப் பட்டிருந்த பழைய இறைச்சி, காலையில் சமைத்து பயன் படுத்திய பின் மீதமாகி குளிர் பதன பெட்டியில் வைக்கப்பட்டிருந்த சாம்பார், சட்னி, குருமா , அச்சிடப் பட்ட காகிதத்தில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த வடை, பஜ்ஜி, சமோசா,பூரிஉட்பட சுமார் 20 கிலோ உணவு பொருட்கள், மேலும் அனுமதி மறுக்கப்பட்ட ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக் கூடிய பிளாஸ்டிக் பொருட்கள் 5 கிலோ பறிமுதல் செய்து அழிக்கப் பட்டன.
சுகாதாரமற்ற முறையில் இயங்கும் உணவகங்கள் மற்றும் அனுமதி மறுக்கப்பட்ட ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக் கூடிய பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு போன்ற விதிமுறைகள் மீறல்கள் குறித்து இரண்டு உணவகங்களுக்கு 6000 ரூபாய் அபராதமும், ஏற்கெனவே பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு அபராதம் விதிக்கப்பட்ட ஒரு உணவகத்தில் மீண்டும் ஒருமுறை மட்டுமே பயன்படக்கூடிய பாலித்தீன் பைகள் கைப்பற்றப்பட்டதால் இரண்டாம் முறை குற்றத்திற்காக அந்த உணவகத்திற்கு ரூ5000 அபராதமும் விதிக்கப்பட்டது.அனைத்து உணவகங்களுக்கும் தடைசெய்யப்பட்ட ஒரு முறை பயன்படக் கூடிய பாலித்தீன் பைகள் பயன்படுத்தக் கூடாது என்று அறிவிப்பு வழங்கப் பட்டது.