சங்கரன்கோவிலில் இருந்து சென்னை மற்றும் கோயம்புத்தூருக்கும், திருநெல்வேலிக்கும் அரசு குளிர்சாதன வசதியுடன் கூடிய விரைவு பேருந்துகளை இயக்க வேண்டும் என அமைச்சர் சிவசங்கரிடம் வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ கோரிக்கை மனு அளித்தார்.
அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதியில் சங்கரன்கோவில் மற்றும் சுற்று வட்டாரங்களில் வாழும் மக்கள் நெசவுத்தொழில் சம்பந்தமான மூலப்பொருள் வாங்குவதற்கும், மென்பொருள் (சாப்ட்வேர்) சம்பந்தமான பணிகளுக்கு செல்வதற்கும், விவசாயம் சார்ந்த தொழில் சம்பந்தப்பட்ட பொருட்கள் வாங்க, விற்க சென்னை மற்றும் கோயமுத்தூர் நகருக்கு சென்று வருகிறார்கள். மேலும் சங்கரன்கோவிலில் இருந்து திருநெல்வேலிக்கு வியாபாரம் மருத்துவம், படிப்பு, வேலை தொடர்பாக தினமும் செல்லும் மக்கள் அதிகம் உள்ளனர். எனவே மேற்கண்ட சென்னை, கோயம்புத்தூர் மற்றும் திருநெல்வேலி மூன்று நகரங்களுக்கும் சங்கரன்கோவிலில் இருந்து அரசு விரைவு பேருந்து குளிர்சாதன வசதியுடன் தினசரி சென்று வர பேருந்து இயக்க வேண்டும் எனவும்,மேலும் தென்காசி முதல் திருநெல்வேலி வரை சென்று வந்த அரசு விரைவு பேருந்து ஓராண்டு காலமாக நிறுத்தப்பட்டு விட்டது எனவே மேற்படி பேருந்தும் தொடர்ந்து இயக்க ஆவண செய்யவேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது



