கருங்கல், மார் – 19
கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மத்தி கோடு ஊராட்சி மற்றும் பல பகுதி மக்கள் பயன் பெறும் திக்கணம் கோடு கிளை கால்வாய் சீரமைப்பு இன்றி பழுதடைந்து காணப்படுகிறது. இந்த கால்வாயை சீரமைக்க ஏற்கனவே இடத்தை பார்வையிட்டு, ராஜேஷ்குமார் எம் எல் ஏ கோரிக்கை விடுத்திருந்தார். இந்த நிலையில்
தமிழக சட்டசபையில் நேற்று கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் செ. ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ. பேசியதாவது:-
மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, கன்னியாகுமரி மாவட்டத்தில் மிக முக்கியமான கால்வாய் பத்மநாபபுரம் – புத்தனார் பட்டணம் கால்வாய் நீண்டகாலமாக தூர்வாரப்படாமல் இருக்கிறது. அதேபோல நிறைய இடங்களில் உடைந்து கிடக்கிறது. அந்த உடைந்த பகுதிகளிலே பக்கச்சுவர் ஏற்படுத்தி, அந்த கால்வாய் நீண்டகாலமாக தூர்வாரப்படாத பட்டணம் கால்வாய், திக்கணங்கோடு கால்வாயை தூர்வாரித் தருமாறு மாண்புமிகு பேரவைத் தலைவர் வாயிலாக அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
இதற்கு நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் பதிலளித்து கூறியதாவது:-
சட்டமன்ற உறுப்பினர் சொன்ன கால்வாய் மட்டுமல்ல, பொதுவாக கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓடுகிற ஆறுகள் எல்லாம் கடந்த பெருமழையால் கரைகள் அரிக்கப்பட்டு தெருவுக்கும், கரைக்கும், ஆற்றுக்கும் வித்தியாசம் தெரியாத நிலைமை நீள்கிறது. இதை ஒரு பெரும் முயற்சி எடுத்து, பெரும் திட்டத்தோடு, ஒவ்வொரு ஆற்றுக்கும் கால்வாய் அமைத்தால் தான் நாஞ்சில் நாடு வளமாக இருக்க முடியும். எனவே, உறுப்பினர் சொன்னதை தனி கவனமாகச் செலுத்தி என்னவென்று கேட்டு சொல்லி ஆணைக்கு உட்படுத்துகிறேன். இவ்வாறு அமைச்சர் துரைமுருகன் கூறினார்.